பாடகி தீ கூட பாட்டு பண்ண கேட்கவே கூச்சப்பட்டேன்.. அறிவு மற்றும் தீ பேசிய பழைய பேட்டி டிரெண்டாகுது!
சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தனக்கு யாரும் ட்யூன் கொடுக்கல என பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார் எழுத்தாளரும் பாடகருமான தெருக்குரல் அறிவு.
அதற்கு கடந்த சில நாட்களாகவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ விளக்கம் அளித்து வந்தனர்.
அவர்கள் அளித்த விளக்கத்தில் மூன்று பேரும் இணைந்தே பணியாற்றினோம் என்றும் தெருக்குரல் அறிவின் பங்களிப்பு பெரிது என்றும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், பாடகி தீ உடன் இணைந்து பாட தனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என தெருக்குரல் அறிவு பேசிய த்ரோபேக் பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது.

என்ஜாயே போச்சு
என்ஜாய் எஞ்சாமி என்கிற ஒரு பாடலை பாடி ஒட்டுமொத்த உலகையே ஆட வைத்த தெருக்குரல் அறிவு மற்றும் தீ இடையே இப்படியொரு மோதல் வெடிக்கும் என இசையுலக ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதே போல சந்தோஷ் நாராயணன் மற்றும் பா. ரஞ்சித் இடையே பிளவு ஏற்படக் காரணமாகவும் தெருக்குரல் அறிவு பிரச்சனையே அமைந்துள்ளது என்கின்றனர். என்ஜாய் எஞ்சாமியில் உள்ள என்ஜாயே இதனால் போச்சு என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பொங்கிய அறிவு
தனக்கு எதிராக துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்பதை போல என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு உண்டான கிரெடிட்ஸ் மொத்தத்தையும் சந்தோஷ் நாராயணனும் அவரது மகள் தீயும் அபகரித்துக் கொண்டனர் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக தனக்கு யாரும் ட்யூன் போட்டுத் தரல, உதவி செய்யல, இது 6 மாசம் நானே சொந்தமா தூங்காம உழைச்சி போட்ட பாட்டு என பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.

காக்கா முட்டை மணிகண்டன் ஐடியா
இந்த பாடலுக்கான மூல ஐடியாவே காக்கா முட்டை மணிகண்டன் கடைசி விவசாயி படத்துக்காக வைத்திருந்தது தான் என தெருக்குரல் அறிவும், பாடகி தீயும் கடந்த ஆண்டு பேசிய வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதி, மதங்கள் இல்லாத சமுதாயத்தில் மக்கள் பஞ்ச பூதங்களை வழிபட்டு விவசாயத்தை பேணி வளர்த்த கதையின் ஆணி வேராகவே இந்த பாடல் உருவானது என தெருக்குரல் அறிவு கூறியுள்ளார்.

கேட்கவே கூச்சப்பட்டேன்
அந்த பேட்டியில் பாடகி தீ பற்றி பேசிய தெருக்குரல் அறிவு, நானெல்லாம் பெரிய பாட்டு பாடவே இல்லை. எப்படி தீ உடன் இணைந்து கொலாபரேட் செய்வது என்று ரொம்பவே யோசித்தேன். அவரிடம் இணைந்து பாட்டு பாடுவது குறித்து கேட்க ரொம்பவே கூச்சப்பட்டேன். ஆனால், ஒரு நாள் அவரே, நாம இரண்டு பேரும் சேர்ந்து மஜாவுக்காக ஒரு பாடல் பாடலாம் என கேட்ட போது ரொம்பவே சந்தோஷப்பட்டேன் என பேசி உள்ளார்.

விக்னேஷ் சிவன் விளக்கம்
இயக்குநர் விக்னேஷ் சிவனும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடகி தீ மட்டும் ஏன் பாடினார். தெருக்குரல் அறிவு ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். பல முறை அவரை அழைத்தும் அவர் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் தான் தெருக்குரல் அறிவின் மிகப்பெரிய ரசிகன், எங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











