கொஞ்சம் பிளாஷ்பேக்.. ஸ்டிரைக் நேரத்தில் 'தல' அஜித்துக்கு ஒரே ஒரு நாள் ஹீரோயின் ஆன பிரபல நடிகை!
சென்னை: பிரபல நடிகை ஒருவர் அஜித்துக்கு ஜோடியாக ஒரே ஒரு நாள் மட்டுமே நடித்துள்ளார்.
சினிமாவில், நினைத்தது எதுவும் உடனே நடந்துவிடாது. அது தாங்க முடியாத அவஸ்தை. வெளியேற்றவும் விழுங்கி விடவும் முடியாத சுகமான அவஸ்தை!
வாய்ப்பு, நாளைக் கிடைத்துவிடும் என்கிற மாதிரியே எல்லா நாளும் இருக்கும். மனதுக்குள் மகிழ்ச்சி கூடவே வந்துகொண்டிருக்கும், எதையோ பாடியபடி.

ஒவ்வொரு நாளும்
ஆனால், ஏதோ காரணத்துக்காகவோ, காரணமே இல்லாமலோ வாய்ப்புகள் மட்டும் தள்ளிப் போய் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து, பத்து வருடங்களும் மேலாக நம்பிக்கையோடு தயாரிப்பாளரைப் பிடிக்க அலைந்துகொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் அதிகம். உடனடியாக வாய்ப்பு கிடைத்து இயக்குனர் ஆனவர்களும் இருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள்
இது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, நடிகர், நடிகைகளுக்கும்தான். அப்படி பெரும் கனவோடு வந்த நடிகை, ஒரே ஒரு நாள் படப்பிடிப்போடு, நடையை கட்டிய சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. அவர் சென்றதக்கு சொல்லப்பட்ட காரணம், 'நடிப்பு சரியில்லை'. தல அஜித்தின் தாறுமாறான ஹிட் படங்களில் ஒன்று, வாலி. அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார், அந்தப் படத்தில்.

வில்லத்தனம்
அதில், ஒரு கேரக்டர் வில்லன். வாயை அசைத்துக்கொண்டே அவர் காட்டும் அந்த வில்லத்தனம், மிரட்டல். எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படமான இதை, அஜித்தின் அப்போதைய நெருங்கிய நண்பர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். சிம்ரன், ஜோதிகா, விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர். தேவா இசையில், சோனா சோனா, நிலவை கொண்டுவா, ஏப்ரல் மாதத்தில் ஆகிய பாடல்கள் செம ஹிட்!

நடிகை கீர்த்தி ரெட்டி
இந்தப் படத்துக்கு முதன்முதலில் ஹீரோயினாக கமிட் ஆனவர் கீர்த்தி ரெட்டி. ஷூட்டிங் ஆரம்பித்த நேரத்தில்தான், பெப்சி பிரச்னை தலை தூக்கியது. அந்த நேரத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார், தல அஜித். அதனால், பெப்சிக்கு ஆதரவாக ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றார். உடனடியாகப் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டிருந்த கீர்த்தி ரெட்டி, சென்னை வந்தார்.

ஹீரோயின் ஆன சிம்ரன்
மெரினா பீச்சில் ஷூட்டிங். பாடல் காட்சி. ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங். மறுநாளில் இருந்து தடைபட்டது படப்பிடிப்பு. அந்தக் காட்சியில் கீர்த்தி ரெட்டியின் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு சிம்ரனை ஹீரோயின் ஆக்கினார். பின்னர் கீர்த்தி ரெட்டி, நாசரின் தேவதை, நந்தினி, நினைவிருக்கும் வரை உட்பட சில படங்களில் நடித்தார்.

நிறுத்திவிட்டார்
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த அவர் இப்போது நடிப்பதை நிறுத்திவிட்டார். தெலுங்கு நடிகர் சுமந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார், 2004 ஆம் ஆண்டு. பின்னர் 2006 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார் கீர்த்தி!


Click it and Unblock the Notifications











