பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை.. விஷால் புகார் குறித்து ஆர்பி சவுத்ரி விளக்கம்!
சென்னை: தன்னுடைய சினிமா அனுபவத்தில் பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரி மீது கடந்த வாரம் சென்னை காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதாவது படத் தயாரிப்புக்காக நடிகர் விஷால் ஆர்பி சவுத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக தன் வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில பத்திரங்களை ஆவணங்களாக கொடுத்ததாக தெரிகிறது.

விஷால் போலீஸில் புகார்
இந்நிலையில் கடன் தொகையை செலுத்திய பிறகும் உறுதி மொழி பத்திரங்களை திருப்பித் தராததால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஷால் கடன் வாங்கினார்
இதனை தொடர்ந்து விஷாலின் புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அதில், இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார்.

எழுதி கொடுத்துவிட்டோம்
அவர் மாரடைப்பால் இறந்து விட்டதால் அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

ஆலோசித்திருக்கலாம்
மேலும் கொடைக்கானலில் இருந்த ஆர்பி சவுத்ரி சென்னை திரும்பியதும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, நடிகர் விஷால் முன்னெச்சரிக்கையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும் அதற்கு முன்பு தன்னிடம் ஒருமுறை ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறியிருக்கிறார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
தன்னுடைய திரை அனுபவத்தில், பணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் ஆர்.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் விஷாலின் ஆவணங்களை சிவக்குமார் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருந்தால், அதனை உடனடியாக திருப்பி கொடுக்குமாறும், அதனை பயன்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











