ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான இந்தியப் படம் இதுதான்!
மும்பை : சினிமா விருதுகளில் சினிமா கலைஞர்கள் மிகவும் பெரிதாகக் கருதுவது ஆஸ்கர் விருது தான். பல கலைஞர்களுக்கு அதுதான் உச்சபட்சக் கனவாக இருக்கும்.
ராஜ்குமார் ராவ் நடிப்பில் 'நியூட்டன்' என்ற பாலிவுட் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திரைப் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் 2018-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இப்படத்தில் நடித்த நடிகர் ராஜ்குமார் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கருக்கு தேர்வு :
சினிமாத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பல பிரிவுகளாக ஆஸ்கர் விருதுகள் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அயல்நாட்டு திரைப்படம் என்ற பிரிவிற்காக 'நியூட்டன்' திரைப்படம் இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நியூட்டன் :
'நியூட்டன்' திரைப்படத்தை அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாகும். கடந்த 2014-ம் ஆண்டில் ‘சுலேமானி கீடா' எனும் படத்தை இயக்கியுள்ளார் அமித். இதன் மூலம் இரண்டாவது படத்திலேயே ஆஸ்கர் லெவலுக்கு போயிருக்கிறார் அமித்.

ஒருமித்த தேர்வு :
ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தேர்வுக்கமிட்டியின் ஒருமித்த தேர்வாக இந்தப் படம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்வில் கலந்து கொண்ட 26 படங்களில் ‘நியூட்டன்' அதிகாரப்பூர்வமாக ஆஸ்காரில் பங்கு கொள்ளவிருப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலர் சுரான் சென் கூறியுள்ளார்.
ராஜ்குமார் ராவ் :
'உண்மையிலேயே இது நேர்மையான படம், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்களுடைய முழு சக்தியையும் இப்படத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்துவோம்' எனக் கூறியிருக்கிறார் இப்படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ்.

இரட்டிப்பு மகிழ்ச்சி :
'இந்தப் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகிறது. அதே சமயத்தில் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது' எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மசூர்கர்.

என்ன கதை :
'நியூட்டன்' படம், நக்சலைட் மோதல் மிகுந்த சத்திஸ்கர் பகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முயலும் நேர்மையான தேர்தல் அதிகாரியின் நிலைமையை அரசியல் நையாண்டியோடு விவரிக்கும் கதை ஆகும்.


Click it and Unblock the Notifications











