வள்ளல்கள் அவதரிப்பதற்கான காலம் வந்துவிட்டது.. இயக்குனர் வசந்தபாலன் டச்சிங் லாக்டவுன் போஸ்ட்!
சென்னை: வள்ளல்கள் உருவாகும் காலம் வந்துவிட்டது என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
மே 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த லாக்டவுன், 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

உணவு உற்பத்தி
தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. பலரின் வாழ்வாதாரம் சிக்கலாகி இருக்கிறது. இந்நிலையில் வள்ளல்கள் அவதரிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார், பிரபல இயக்குனர் வசந்தபாலன். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக உணவு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

காவல்கோட்டம்
அது மீண்டும் தடையின்றி நடந்தால்தான் அடுத்து வரும் மாதங்களில் ஏற்படப்போகும் உணவு பஞ்சத்திலிருந்து நம்மைக் காக்க முடியும். கொரோனோ முன்னேற்பாடுகளை எத்தனை தீவிரத்துடன் கவனிக்கிறோமோ அதே முனைப்பில் நாம் உணவு உற்பத்தி பற்றிய கவனமும் கொள்ளவேண்டும். 'காவல்கோட்டம்' நாவலில் தாது பஞ்சம் பற்றிய ஒரு வாழ்க்கைச்சித்தரம் இடம் பெற்றிருக்கும்.

கண்களுக்குத் தெரிகிறது
தாது பஞ்சத்தில் நமக்குத் தெரிந்த ஒரு கதாபாத்திரம் நல்லதங்காள். பஞ்சத்தின் துயர் தாளாது தன் குழந்தைகளைக் கிணற்றில் போட்டு விட்டு கிணற்றில் குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொள்வாள். பஞ்சத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற ஒரு கதாபாத்திரம் நம் கண்களுக்குத் தெரிகிறது என்றால் அதற்கு நேரெதிராக உள்ள கதாபாத்திரமும் இருந்திருக்கும் தானே என்று சு. வெங்கடேசன் சொல்கிறார்.

பசியாற்றினாள்
நல்லதங்காளுக்கு நேரெதிரான தேவதாசி கதாபாத்திரம் என்ன செய்திருக்கும்? மக்களின் பஞ்சத்தைப் பார்த்து மனம் இளகிப் போன தேவதாசி தன் சொத்தையெல்லாம், கஞ்சி காய்ச்சி ஊற்றி ஏழை மக்களின் பசியாற்றினாள் என்கிற ஒரு கதை வருகிறது. பசியாற்றுவது எத்தனை உயர்வான வார்த்தை. பசியாறும் போது உணவளித்தவர்கள் தேவர்களாக, தேவதைகளாக அல்லவா தெரிவார்கள்.

அம்மனாகத் தெரிவாள்
மதியம் சம்பாரையும் அவியலையும் வயிறுமுட்ட சாப்பிட்டு எழும் போது வியர்வை வழிய அமர்ந்திருக்கும் என் அம்மா, ஆயிரம் கண்ணுடைய அம்மனாகத் தெரிவாள். பஞ்சம் உருவாகும் காலத்தில்தான் வள்ளல்கள் பிறந்து வருவார்கள். அவர்கள் அவதரிப்பதற்கான காலம் வந்துவிட்டது. முட்டைக்குள்ளிருந்து வெளியே வாருங்கள். கருப்பையிலிருந்து புறப்படவேண்டிய நேரம் கனிந்துவிட்டது.

காக்கவேண்டும்
இன்று, ஒவ்வொரு சிறுநகரத்திலும் பெரும் பணக்காரர்கள் நிறைந்து வழிகிறார்கள். கொடைத்தன்மை உள்ள செல்வந்தர்கள் அந்தந்த கிராமத்தை சிறுநகரத்தை தத்து எடுத்துகொண்டு அடித்தட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் பெரும் பஞ்சத்தில் இருந்து அவர்களை காக்கவேண்டும். திரை நாயகர்களும் முடிந்த உதவியை செய்தவண்ணம் இருக்கிறார்கள். அது இன்னும் தொடரவேண்டும். தொடரும்.

வரிசைக் கட்டி
உணவுப் போராட்டத்தைத் தாண்டி வீட்டு வாடகை, மின் கட்டணம், அலைபேசி கட்டணம், இணையவசதி கட்டணம் வருடாந்திர கடன் தொகை என்று பூதங்கள், எறும்புகள் போல வரிசைக் கட்டி நிற்கும். இதை எப்படி கட்டப்போகிறோம் என்கிற கவலை மேலெழுந்து மூச்சுத் திணறிக் கொண்டிக்கும் நேரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய விவாதங்கள் தொலைக்காட்சியில் நடந்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறு வசந்தபாலன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











