கட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு.. முடிவை விரைவில் அறிவிக்கிறார்!
சென்னை: தனது மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
Recommended Video
ரஜினி பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என்று கூறியிருந்தார் ரஜினி.

முடிவை அறிவிப்பேன்
இதனால், அவர் கட்சி தொடங்குவது பற்றி பரபரப்பு விவாதம் எழுந்தது. அவர் இனி கட்சி தொடங்க வாய்ப்பில்லை என்றும் தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்திருந்தார்.

கட்சித் தொடங்கினால்
அதன்படி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசிய ரஜினி, கட்சித் தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்களை பற்றி ஆலோசித்தார்.

ஆரம்பிக்க வேண்டும்
அவர்கள், கண்டிப்பாக கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கட்சி தொடங்கினால், ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.

அறிவிக்க இருக்கிறார்
இந்நிலையில், ஜனவரி மாதம் அவர் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் அதை அவரே அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 மணி நேரமாக நடந்த இந்த ஆலோசனை கூட்டம் 12 மணி அளவில் முடிந்தது. நிர்வாகிகளின் கருத்தை கேட்டுக்கொண்ட ரஜினி, அறிக்கை மூலம் தனது முடிவை அறிவிக்க இருக்கிறார் என்றும் இன்று அல்லது நாளை அந்த அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வருவாரா வரமாட்டாரா
இதற்கிடையே ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், 'ரஜினி, அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது பற்றி இன்று பேசப்பட்டது. வேறு எதையும் பேசவில்லை. ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம். அரசியலுக்கு வருகிறேன் என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்போம் என்றும் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











