2.ஓ படப்பிடிப்பில் ரஜினி... பார்க்கக் குவிந்த மக்கள்!
சென்னை: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு '2.O' படப்பிடிப்புக்கு வந்த ரஜினிகாந்தைப் பார்க்க ரசிகர்களும் பொதுமக்களும் குவிந்தனர்.
ரஜினிகாந்த் நடித்து ஏற்கனவே வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் '2.O' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

2.ஓ
ரூ 350 கோடி செலவில், ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு
சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது பூரணமாக குணமடைந்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து ‘2.0' படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பை ஷங்கர் மீண்டும் தொடங்கி உள்ளார்.

திருக்கழுக்குன்றத்தில்
திருக்கழுக்குன்றத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினிகாந்த் திருக்கழுக்குன்றம் சென்றார். அவர் வரும் தகவல் அறிந்ததும் ரசிகர்களும் பொதுமக்களும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டார்கள். ரஜினி காரில் இருந்து இறங்கியதும் அவரை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர்.

படப்பிடிப்பு
போலீஸார் பாதுகாப்புடன் ரஜினிகாந்தை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் கதாநாயகி எமிஜாக்சனுடன் ஆடிப்பாடுவது போன்ற டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டன.

கடும் பாதுகாப்பு
படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்க படப்பிடிப்பு நடந்த பகுதியை சுற்றிலும் தனியார் பாதுகாவலர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருக்கழுக்குன்றத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications











