கலாம் நினைவாக... நடிகர் விவேக் நடத்திய அமைதி பேரணி: மாநாடு போன்று திரண்ட கூட்டம்
சென்னை: நடிகர் விவேக்கின் கிரீம் கலாம் அமைப்பு சார்பில் நடந்த அமைதி பேரணியில் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறந்து வரும் 27ம் தேதியுடன் ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் அவரது நினைவு நாளையொட்டி நடிகர் விவேக்கின் கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் இன்று சென்னையில் மரக்கன்று நடும் விழா மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது.
பேரணி குறித்து விவேக் ட்விட்டரில் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

பேரணி
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை அடுத்து ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் விவேக் உரையாற்றினார்.

மரக்கன்றுகள்
கிரீன் கலாம் அமைப்பு மூலம் தமிழகத்தில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். டாக்டர் கலாம் அய்யா என்னை அழைத்து 10 லட்சம் மரக்கன்றுகளை நடுமாறு அன்பு கோரிக்கை விடுத்தார். 10 லட்சமாவது மரக்கன்றை அய்யா அவர்களே கடலூரில் நட்டார் என்றார் விவேக்.

1 கோடி
1 கோடி மரக்கன்றுகளை நீங்கள் நட வேண்டும் என்று கலாம் அய்யா என்னிடம் கூறினார். அதன்படி இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். 1 கோடி இலக்கை மனதில் வைத்து செயல்படுகிறேன் என்று விவேக் தெரிவித்தார்.

பொது இடங்கள்
இதுவரை பள்ளி, கல்லூரி வளாகங்களில் தான் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இனி பொது இடங்களில் நட விரும்புகிறேன். 25 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடுவதற்கு ஏதேனும் விழா எடுத்தால் எதுவும் வாங்காமல் அதில் நான் கலந்து கொள்ள தயாராக உள்ளேன். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று விவேக் கூறினார்.


Click it and Unblock the Notifications











