அச்சுறுத்தும் கொரோனா 3 ம் அலை...தீபாவளி ரிலீஸ் படங்களின் நிலை என்னவாகும் ?
சென்னை : ஒரு வழியாக கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஓரளவு குறைய துவங்கி உள்ளதால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை என்றாலும் படப்பிடிப்புக்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் பாதியில் நிறுத்தப்பட்ட படங்களின் படப்பிடிப்புக்கள் மீண்டும் துவங்கப்பட்டு, சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது உறுதியாகாத நிலையில் பல படங்கள் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் உறுதியாக அறிவித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு காத்திருக்கும் படங்கள்
அந்த வரிசையில் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விக்ரமின் சியான் 60 போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சிம்புவின் மாநாடு படம் தியேட்டரில் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வருகிறது. மே மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம் தியேட்டர்கள் மூடப்பட்டதால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது.

கொரோனாவை மீறி மக்கள் வருவார்களா
தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் ரிலீஸ் செய்வதற்கு என்றே தலைவி, லாபம் உள்ளிட்ட பல படங்கள் காத்திருக்கின்றன. வரிசையாக பல படங்கள் ரிலீசுக்காக காத்திருப்பதால் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே தியேட்டர்கள் கிடைத்து படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு எப்போது அரசு அனுமதி அளிக்கும் என தெரியாது. அனுமதி கிடைத்தாலும் கொரோனா அச்சத்தையும் மீறி மக்கள் தியேட்டர்களுக்கு வருவது சந்தேகம் தான்.

கைகொடுத்த மாஸ்டர் ரிலீஸ்
கொரோனா முதல் அலையின் போதே மக்கள் தியேட்டர்களுக்கு வர தயக்கம் காட்டினர். இதனால் நவம்பர் மாதம் திறக்கப்பட்ட தியேட்டர்கள் ஜனவரி வரை வெறிச்சோடியே காணப்பட்டன. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த மாஸ்டர் படம் தான் மீண்டும் மக்களை தியேட்டர் பக்கம் வரவழைத்தது. தியேட்டர் உரிமையாளர்கள் சிறிது நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை வந்து நிலைமையை தலைகீழாக்கி விட்டது.

நம்பிக்கையில் தியேட்டர் உரிமையாளர்கள்
அக்டோபர் மாதத்திற்குள் நிலைமை சரியாகி விடும், தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆயுத பூஜை ரிலீசுக்காக தயாராகி வருகிறது மாநாடு படம். பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்கிறார்கள். அது மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நம்புகிறார்கள்.

தியேட்டர்கள் கிடைக்குமா
ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீஸ் செய்வதென்றால் தியேட்டர்கள் கிடைக்குமா ? அப்படி ரிலீஸ் செய்யப்பட்டால் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதிலேயே சிக்கல் இருக்கும் போது மற்ற சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்கள் கிடைப்பதற்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

கொரோனா 3 ம் அலை வருதே
இது ஒரு பக்கம் இருந்தாலும், கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அப்படி கொரோனா 3 ம் அலை உருவாகும் பட்சத்தில் தியேட்டர்கள் இப்போதைக்கு திறப்பதற்கான வாய்ப்பே இல்லை. தியேட்டர்கள் திறப்பு தள்ளிப் போனால் பெரிய நடிகர்கள் உள்ளிட்ட அனைவரின் படங்களும் மேலும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஓடிடி.,க்கு தான் போகனுமா
இல்லையென்றால் பெரிய நடிகர்களின் படங்களே ஓடிடி.,யில் தான் ரிலீஸ் செய்ய வேண்டி இருக்கும். தியேட்டர்கள் திறக்கப்பட்டு, படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெயரளவில் தியேட்டரில் ரிலீஸ் செய்து விட்டு, ஒரு சில நாட்களிலேயே ஓடிடி.,யை நாட வேண்டிய நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications











