வீரப்பேரரசி வேலு நாச்சியார் கதையை சினிமாவாக்க 3 பேர் போட்டி.. எது முதல்ல வரும்னு தெரியலையே?
சென்னை: ராணி வேலு நாச்சியார் கதையை மூன்று பேர் படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியில் ஆட்சி புரிந்தவர், வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.
அவர் 1780 முதல் 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கை பகுதியில் ஆட்சி செய்தவர்.

வாழ்க்கைக் கதை
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் தலைவி. இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. வீரமும் போராட்டமும் நிறைந்த வேலு நாச்சியாரின் வாழ்க்கைக் கதையை சினிமாவாக்க சிலர் முயன்று வருகின்றனர். இப்போது பயோபிக் டிரெண்ட் என்பதால் இந்தப் போட்டி அதிகமாக இருக்கிறது.

இளையராஜா
வேலுநாச்சியார் கதையை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தயாரிக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. பிறகு அந்தப் படம் பற்றிய தகவல் வெளிவரவில்லை.

இயக்குனர் சுசி கணேசன்
இந்நிலையில், இயக்குனர் சுசி கணேசன், வேலு நாச்சியார் கதையை படமாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. வேலு நாச்சியார் கேரக்டருக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சரியாகப் பொருத்துவார் என்று கூறப்பட்டதை அடுத்து, அவரிடம் பேசி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகின.

சிவகங்கை ராணி
இதற்கிடையே, 'வீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி' என்ற பெயரில் மற்றொரு படம் உருவாக இருக்கிறது. இதை, 18 கே ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேந்திரன் மணிமாறன் இயக்குகிறார் . தைத் திருநாளில் இதன் ஷூட்டிங்
தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது.

அலுவலக பூஜை
இதுபற்றி படக்குழு கூறும்போது, வேலு நாச்சியாரின் 224-வது நினைவு நாள் கடந்த 25 அன்று கடைபிடிக்கப்பட்டது. அதனையொட்டி, இந்தப் படத்தின் அலுவலக பூஜை போடப்பட்டது. இந்தக் கதையை படமாக எடுக்க சட்டரீதியான உரிமை பெறப்பட்டுள்ளது. இதில் வேலு நாச்சியாராக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு
மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்கள் பலவற்றில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜேந்திரன் மணிமாறன் இயக்குநராகிறார். படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீவபாரதி வசனம் எழுதவிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











