விஸ்வரூபம் படத்தை முஸ்லீம்களிடம் காட்டி விட்டு கமல் வெளியிடட்டும்- தமுமுக
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ரிபாயி விடுத்துள்ள அறிக்கையில்,
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
பிழைப்புக்காக இஸ்லாமியர்களை குற்றவாளியாக்குகின்றனர்
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.
அமெரிக்கா -இஸ்ரேலைக் கண்டிக்கத் தைரியமில்லை
ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.
குஜராத் அவலத்தை தோலுரிக்க தைரியமில்லை
இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
ஜெ.வை. கமல் சந்தித்தது ஏன்?
கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதல்வ ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.
இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா என்று அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களும் கமல்ஹாசனிடமே நேரடியாக கேட்டனர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசன் பதிலளித்தார். இந்த நிலையில் தமுமுக கமல்ஹாசனுக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications












