தெருவுக்கு விவேக் பெயர்... கோரிக்கையை ஏற்ற முதல்வர்.... தகவல் வெளியிட்ட அமைச்சர்
சென்னை : மறைந்த நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காமெடியன், டிவி பிரபலம், பின்னணி பாடகர், சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் விவேக். கே.பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுகாசினியின் தம்பி ரோலில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர். தனது நகைச்சுவையால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து, சின்ன கலைவாணர் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் விவேக்.

மனங்களை வென்ற விவேக்
கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளையும் விவேக் பெற்றுள்ளார். சிறந்த காமெடியனுக்கான பல விருதுகளை வாங்கி உள்ளார். இது தவிர கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார் விவேக். மேடை காமெடி பேச்சாளராக தனது வாழ்க்கையை துவங்கி, பெரிய நடிகராக வளர்ந்து அனைவரின் மனதிலும் இடம்படித்தவர் விவேக்.

ஒரு கோடி மரம் நடும் கனவு
தனது படங்களில் சிரிக்க வைக்கும் காமெடியுடன் சிந்திக்க வைக்கும் கருத்துக்களையும் அதிகம் புகுத்தியவர் விவேக். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீதான பற்றின் காரணமாக அவரது பெயரால் க்ரீன் கலாம் என்ற ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தி வந்தார் விவேக். ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விவேக் ஏப்ரல் 17 ம் தேதி உயிரிழந்தார்.

தெருவுக்கு விவேக் பெயர்
இந்நிலையில் சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி, சமூகத்திற்காகவும், கலைத்துறைக்காகவும் விவேக் நிறைய பங்காற்றி உள்ளார். ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற அவரது கனவை அவரது ரசிகர்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதனால் அவர் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் சொன்ன தகவல்
விவேக் குடும்பத்தினரின் இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் தெருவுக்கு விவேக் பெயரை வைக்க முதலமைச்சர் அரசாணை வெளியிட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் திரைத்துறையை சேர்ந்த பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











