ரத்தானது ஊரடங்கு...பிப்ரவரி மாத ரிலீசுக்கு போட்டா போட்டி... கலக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்கள்
சென்னை : தமிழகத்தில் ஊடரங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், தள்ளி வைக்கப்பட்ட பல படங்கள் பிப்ரவரி மாத ரிலீசை குறிவைத்து போட்டி போட துவங்கி விட்டன. இதனால் பிப்ரவரி ரிலீசை முடிவு செய்து வைத்திருந்த சிறிய பட்ஜெட் படங்கள் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் உள்ளன.
2022 ம் ஆண்டு பொங்கலை குறிவைத்து பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்தன. ஆனால் திடீரென தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டதால், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் சற்று தயக்கம் காட்ட துவங்கின. வரிசையாக அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

தள்ளிவைப்பிற்கு இதுதான் காரணம்
உண்மையில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் என்பது பிரச்சனை இல்லை. 2021 ம் ஆண்டு பொங்கலின் போதும் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த சமயத்திலும் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்து, வசூல் சாதனை படைத்ததால் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. 50 சதவீதம் பேர் என்பது பிரச்சனையே கிடையாது. ஆனால் இரவு நேர ஊடரங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊடரங்கு என அறிவிக்கப்பட்டது தான் தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்தது. வார இறுதி நாட்கள், மாலை நேர ஷோக்களில் தான் வசூலை பார்க்க முடியும். அதற்கு சிக்கல் வந்ததால் தான் படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

களமிறங்கிய சிறிய பட்ஜெட் படங்கள்
ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர், வலிமை போன்ற மெகா பட்ஜெட் படங்கள் ஜனவரி மாதம் ரிலீஸ் அறிவித்ததால் தான் சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டன. ஆனால் பொங்கல் ரேசில் இருந்து பெரிய படங்கள் விலகியதால், யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக நாய் சேகர், கொம்புவச்ச சிங்கம்டா போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் துணிந்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டன.

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்
தற்போது தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியன ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர், வலிமை, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பிப்ரவரி மாத ரிலீசை குறிவைத்து, தேதிகளை முடிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படங்கள் ஏற்கனவே அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்யலாமா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளன. தியேட்டர்கள் கிடைப்பது, வசூல் என அனைத்திலும் சிக்கல் வரும் என யோசிக்கின்றன. இதற்கிடையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜனவரி 14, ஜனவரி 26 என இருமுறை ரிலீஸ் தேதியை தள்ளிவைத்து, பிப்ரவரி 4 ல் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வந்தது. தற்போதைய சூழலில் படம் இன்னும் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.

சிக்கலில் சிறிய பட்ஜெட் படங்கள்
ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாக உள்ளதால் பிப்ரவரியா, மார்ச்சா என முடிவு செய்ய முடியாமல் பல படங்கள் குழம்பி போய் உள்ளன. பெரிய படங்களுக்காக மார்ச் மாதத்திற்கு ரிலீசை தள்ளி வைக்கலாம் என்றால், முந்தைய ஆண்டுகளை போல் கோடையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால், புதிய உத்தரவுகள் வந்து மார்ச் மாதமும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விடுமே என அச்சமும் பல தயாரிப்பாளர்களிடம் காணப்படுகிறது. இதனால் இந்த பிரச்சனைகளை தாண்டி பிப்ரவரி மாதத்தில் முதல் ரிலீசை உறுதி செய்யப் போவது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமல்ல அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











