பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி!
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஓபனிங் உள்ள சீஸன் என்றால் அது பொங்கல் திருவிழா காலம்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு புதுப் படங்கள் பார்க்க மக்கள் அலை மோதுவார்கள். இந்த நாட்களில் கூடுதல் காட்சிகள் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13,17,18,19 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி, (அதாவது 5 காட்சிகள்) நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
மேலும் பொங்கல் விடுமுறை நாட்களான 14,15,16 ஆகிய தேதிகளில் ஏற்கனவே உள்ள அரசாணையின்படி, காலை 9 மணிக்கு கூடுதலாக ஒரு காட்சியை நடத்திக்கொள்ளலாம்.
டூரிங் தியேட்டர்கள் எனும் நடமாடும் திரையரங்குகள் 14,15,16 தேதிகளில் காலைக் காட்சிகளை 9 மணிக்கு நடத்திக் கொள்ளலாம். 13, 17, 18, 19 தேதிகளில் மேட்னி காட்சியை 2.30 மணிக்கு நடத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான காட்சிகள் திரையிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், கேளிக்கை வரி அதிகாரிகளிடமும் தெரிவித்துவிட்டு நடத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











