ஸ்வரங்கள் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ… பாடும் நிலா SPB 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று
சென்னை: திரையிசையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம்.
இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் எஸ்பிபி கடந்த 2020ல் உடல்நலக் குறைவால் காலமானார்.
எஸ்பிபியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இசை ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

என்னென்ன மாயம் செய்தார்?
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோரையும் ரசிக்க வைக்கும் உருவம் இல்லா ஒரே ஜீவன் இசை மட்டுமே. ஜனனம் முதல் மரணம் வரை எப்படி ஒருவருடன் இசை பயணிக்கிறதோ, அப்படியே எஸ்பிபி என்ற மாயவனின் குரலும். எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற இந்த பாடும் நிலாவின் குரலில், மனிதனின் மனதுக்குள் புதைந்துக்கிடக்கும் சோகங்கள் எல்லாம் காற்றில் கரைந்துபோய்விடும். அப்பேற்பட்ட இந்த மந்திர குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்பிபி விண்ணுலகம் சென்று இரண்டாண்டுகள் ஓடிவிட்டன.

இன்னும் உணர முடியவில்லை
பிறந்தவர்கள் எல்லாரும் மாண்டே போவார்கள் என்பது எழுதப்படாத விதி. ஆனால், அது கலைஞர்களுக்கு உடல் அளவில் மட்டுமே பொருந்தும். எஸ்பிபி போன்ற இசை ஆளுமைகளுக்கு இன்னும் கற்பனைக்கு எட்டாத தொடர்பியல்கள் இருக்கும் எனக் கூறலாம். பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், தாய், தந்தை, நட்பு, காதல், ஏமாற்றம், தோல்வி, துரோகம், வலி, அழுகை, சிரிப்பு, திருமணம், பிரிவு இன்னும் இருக்கும் அத்தனை உறவுகளையும் உணர்வுகளையும் பாடல்களாக பாடித் தீர்த்துவிட்டு போய்விட்டார் இந்த பாடும் நிலா. அதனால் எஸ்பிபியின் மறைவை இன்னும் யாராலும் உணர முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என நடிகர்கள் வரிசையிலும் சரி, எம்ஸ்வி, இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன், ஜிவி பிரகாஷ், அனிருத் என இசையமைப்பாளர்கள் வரிசையிலும் சரி, மூன்று தலைமுறைகளுக்கும் முத்து முத்தான பாடல்களைப் பாடி, இந்தச் சமூகத்தை துயரங்களில் இருந்து கரை சேர்த்தவர் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொழிகளிலும் பல எல்லைகளைக் கடந்தவர் இந்த ராட்சசன்.

ரசிகர்கள் இதய அஞ்சலி
இசையின் மூலமும் பாடல்கள் வழியாகவும் ரசிகர்களுக்கு திகட்டாத தேன்மழை பொழிந்த எஸ்பிபி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டுகளாக வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடந்த மக்களின் துயரம் துடைத்ததில் எஸ்பிபியின் பாடல்களுக்கும், வடிவேலுவின் காமெடிக் காட்சிகளுக்கும் பெரும் பங்குண்டு. அதே கொரோனா காலத்தில் இந்த உலகைவிட்டு விண்ணுலகம் சென்ற எஸ்பிபியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை, அவரின் பாடல்களை ஒலிக்கவிட்டு இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இசை ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











