நடிகர் சங்கம்: நாளை புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம்!
ஏகப்பட்ட அக்கப் போர்களுக்கிடையில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நாளை வடபழனியில் நடக்கிறது.
காலை 9 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கம் வரும் காலத்தில் எப்படி செயல்பட வேண்டும்? உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? நடிகர் சங்க கட்டட ஒப்பந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? என்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒரு கருத்து உள்ளது. அதன்படி ரஜினி, கமல் ஆகியோருக்கு கவுரவப் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இதுபோன்ற பதவி எதுவும் வேண்டாம் என்று கமல் கூறியுள்ளார். இதில் எப்போதுமே ஆர்வம் காட்டியவரில்லை ரஜினி.
இது தவிர நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரித்து கம்யூட்டரில் பதிவு செய்வது, அதன் மூலம் நலிந்த நடிகர்களுக்கு உதவுவது, நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவு. தன்னலம் கருதாமல் நாடக நடிகர்கள் உள்பட அனைவருடைய நன்மைக்காகப் பாடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
இந்தக் கூட்டம் முடிந்ததும் காலை 10.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. இதில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











