வாழ்க்கை உன்னதமான நினைவுகளால் ஆனது என்பதை உணர்த்திடும் படம் ‘96": திருச்சி சிவா
96 படத்தை பாராட்டியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.
சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்துள்ள 96 படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா.
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இப்படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வெகுவாக பாராட்டியுள்ளார். மூன்று நாட்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்ப்பது இதுவே முதல்முறை என அவர் தெரிவித்துள்ளார்.
96 படம் குறித்து திருச்சி சிவா கூறியிருப்பதாவது,

மூன்று நாளில் இரண்டுமுறை
" என்னுடைய இத்தனை வயதில் மூன்று நாட்களுக்குள் ஒரு திரைப்படத்தை இரண்டாவது முறை பார்த்திருக்கிறேன். ஒரு படத்திற்கு எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையிலும் முத்திரை பதிக்கக்கூடிய தனித்துவம். இயக்கம், நடிப்பு, வசனம், கேமரா, இசை என எல்லாமே.

யதார்த்தமான நடிப்பு
குறைவான வசனங்கள், நடிகர்களின் யதார்த்தமான, உணர்ச்சி வெளிப்பாடுகள். படப்பிடிப்பும், காட்சி அமைப்பும், நீண்ட தூர பேச்சில்லாத நடைகளும் கூட வசனம் இல்லாமலே நிறைய சொல்லுகின்றன. பாத்திரங்களின் உணர்ச்சிகள் எளிதாக, இயல்பாக நம்முடையதாகின்றன.

ஜானுவின் கேள்வி
"ரொம்ப தூரம் போயிட்டியா?" என்ற ஜானுவின் கேள்விக்கு, " உன்னை விட்ட இடத்திலேயே நிற்கிறேன்" என்கிற பதில் காட்சிக்கு பொருத்தமானதாக மட்டும் இல்லாமல் இருபது வருடங்கள் இருவரின் மனதிற்குள் இருந்த கேள்வியாகவும், விடையாகவும் வெளிப்படுகின்றது.

யாரும் தொடமுடியாத உயரம்
இயல்பான நடிப்பில், யாரும் தொடமுடியாத உயரத்தில் விஜய்சேதுபதி. சாவித்திரி, வைஜயந்திமாலா, தேவிகாவைப் போல உண்டா என்று பேசுபவர்களைக் கூட ஏற்றுக்கொள்ள வைக்கும் த்ரிஷாவின் இயல்பான பலவிதமான உணர்ச்சிகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் அற்புதமான நடிப்பு. காட்சிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் மாறும் முகபாவம்.

கௌரியும் ஆதித்தனும்...
இருவரின் இளவயது பாத்திரமேற்று நடிக்கும் கௌரி, ஆதித்தன் ஆகியோர் தேர்ந்த நடிகர்களைப் போல் உணர்ச்சிகளை பேசாமலே கண்களாலும், பாவங்களாலும் வெளிப்படுத்துவது இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. கௌரி இன்னொரு ரேவதியாக வலம் வருவார். பின்னணி இசை இல்லாமல் ஜானகியின் பாடல்களை பாடும்போது அந்த முகபாவம் அற்புதம்.

உழைப்பும் உன்னதமும்
இதற்குமேல் படத்தைப் பற்றி விவரிப்பது இனி பார்க்க வருபவர்களின் ஆச்சர்யங்களையும், சிலிர்ப்பையும் குறைத்து விடும். உழைப்பிற்கும், அதன் விளைவாக உருவாகும் உன்னதமான படைப்பிற்கும் அங்கீகாரமும், பாராட்டும் தருவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்ததன் விளைவே 96 படம் குறித்த இந்த என் பதிவு.

மறக்க முடியாத நபர்கள்
பள்ளி, கல்லூரி காலத்தின் மறக்க முடியாத நண்பர்களோ, நபர்களோ , பசுமையான நினைவுகளோ எல்லோர் மனதிலும் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீரும். இந்த படம் ஒரு தென்றலாய் அவர்களின் நெஞ்சினை நினைவினை வருடிடும். ஒருநாள் தூக்கம் தொலைந்திடும். பல முன்னாள் மாணவர்கள் சங்கம் நிகழ்ந்திடும். காணத்துடித்த சில உயிர்களை காணுகின்ற ஆர்வம் மீண்டும் துளிர்த்திடும்.

வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல
வாழ்க்கை வெறும் பொருளால் ஆனதல்ல. மனிதர்களாலும் சில அற்புதமான உறவுகளாலும், உன்னதமான நினைவுகளாலும் ஆனது என்பதை உணர்த்திடும் திரைப்படம் ‘96". இவ்வாறு திருச்சி சிவா புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











