கிடைத்ததை சரியாக பயன்படுத்தணும்.. கெஞ்சி கேட்கிறேன்.. விஜய்க்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ்?
சென்னை: நடிகராக வந்து இப்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக மாறியிருப்பவர் விஜய். அவரது இந்த வளர்ச்சிக்கு அவரின் திறமை ஒரு காரணம் என்றாலும்; அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் முக்கியமான காரணம். கரியரின் ஆரம்பத்தில் ரொம்பவே பக்கபலமாக அவர் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடம் ஈர்ப்பை பெற்றிருக்கிறது.
கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறார் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிடுகிறது. அதனை தயாரிப்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளையும் செய்து; விஜய் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்களிடையே எண்ணம் எழும் வகையிலும் நடந்துகொண்டார்.
விதை போட்ட எஸ்.ஏ.சி: அப்படித்தான் காட்சிகளும் அரங்கேறி இப்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார் விஜய். ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டது என்னவோ அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யின் கரியர் ஆரம்பத்தில் தொடர்ந்து படங்கள் இயக்கியவர். அதேபோல் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு; விஜய்யை வழிநடத்தியவரும் அவர்தான். மேலும், விஜய்யின் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியதும் அவர்தான் என்பது நினைவுகூரத்தக்கது.

இருவருக்கும் பிரச்னை: நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது உறவு நாளடைவில் சிக்கலை சந்தித்தது. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆரம்பித்த பிரச்னையை; விஜய் நீதிமன்றம்வரை கொண்டு சென்றார். அதேசமயம் எல்லா தந்தை - மகனுக்குள்ளும் வரும் பிரச்னை போன்றுதான் எங்களுக்குள்ளும் பிரச்னை வந்தது என்று கூறினார்.
விஜயம் செய்த எஸ்.ஏ.சி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தபோது முன்வரிசையில் அமர்ந்து பெருமை பொங்க தனது மகனை பார்த்துக்கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி. இதனால் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் இருந்த பிரச்னைகள் தீர்ந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் விஜய் கரூருக்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவம் சந்திரசேகருக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரும் இதுவரை எந்த கருத்தையும் சொல்லவில்லை.
ராம் அப்துல்லா அந்தோணி: இந்நிலையில் ராம் அப்துல்லா அந்தோணி என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், "ஒரு இயக்குநரின் நம்பிக்கைதான் முதலில் வெல்லும். பிறகுதான் அனைத்துமே. இன்றுவரை நானே கண்டிப்பாக ஜெயிப்பேன் என்றுதான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். சினிமா என்பது மிகப்பெரிய மீடியம். நடக்கும் தவறுகளை இதில்தான் தைரியமாக சுட்டிக்காட்ட முடியும். இறைவன் கொடுத்த வரம் இது. அதனால் நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, ஒருவேளை சினிமாவில் மூலம் கிடைத்த பிரபல்யத்தை சரியாக பயன்படுத்துமாறு விஜய்க்கு மறைமுகமாக அட்வைஸ் செய்திருக்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











