காவல் துறை சம்பந்தமான நிகழ்ச்சிக்கு எப்படி அவரை தேர்வு செய்தார்கள் - விக்னேஷ் சிவனை கலாய்த்த உதயநிதி
சென்னை: காவல் துறை சம்பந்தமான நிகழ்ச்சிக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனை எப்படி தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை என்று அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலாய்த்துள்ளார்.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஏகே 62விலிருந்து கழற்றிவிடப்பட்ட விக்னேஷ் சிவன்
அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சொன்ன கதை திருப்தி தராததால் அவர் அந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் லவ் டுடே படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான ப்ரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை ஒருங்கிணைத்த போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியின் வெற்றியாளர்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தலைமையிலான குழு தேர்வு செய்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது.

சிறப்பு விருந்தினர் உதயநிதி ஸ்டாலின்
இந்த விழாவில் அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "விக்னேஷ் சிவன் குழுவிற்கு எனது வாழ்த்துகள். எந்த சினிமா நிகழ்ச்சியிலும் சமீபமாக நான் கலந்துகொள்வதில்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திலிருந்தும் நான் வெளியே வந்துவிட்டேன்.

விக்னேஷ் சிவனை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்
சென்ற ஆண்டு நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொகுத்து இயக்கியது விக்னேஷ் சிவன்தான். அந்த நிகழ்ச்சியை உலகமே வியந்து பாராட்டியது. ஆனால் காவல் துறை சம்பந்தமான இந்த நிகழ்ச்சிக்கு அவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. அவருடைய படங்களின் பெயர் நானும் ரௌடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல். ஆனால் அவர் எடுக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், முயற்சியும் சிறப்பாக இருக்கிறது.

உண்மையான சாமிகள், சிங்கங்கள்
சிங்கம் 1,2,3 மற்றும் சாமி 1,2 என திரையில் காவல் துறை படங்களை பார்த்திருப்போம். உண்மையாகவே காவல் துறையினர் தமிழ்நாட்டை காக்கின்ற சாமிகளாகவும், சிங்கங்களாகவும் இருக்கின்றனர். இப்போது நாம் வாட்ஸ் அப் யுகத்தில் வாழ்கிறோம். எனவே அதில் வருபவைகளை உண்மையா பொய்யா என ஆராயாமல் உடனடியாக ஷேர் செய்துவிடுகிறார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. உண்மையான செய்திகள் பரவ நேரம் எடுத்துக்கொள்கிறது. அதேசமயம் பொய்யான செய்திகள் உடனடியாக பரவி விடுகிறது. எனவே அவைகளை பகுத்தறிய வேண்டும் " என்றார்.


Click it and Unblock the Notifications











