என்ன வேணும்னு கேளு சங்கா.. உதயநிதி அஞ்சலி செலுத்த வந்ததை பார்த்ததும் துடித்து கதறிய ரோபோ சங்கர் மனைவி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவு அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் வளசரவாக்கத்தில் இருக்கும் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்நிலையில் அஞ்சலி செலுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது ரோபோ சங்கரின் மனைவி கதறியது அனைவரையும் கலங்கடித்தது.
மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு சின்னத்திரைக்குள் வந்தவர் ரோபோ சங்கர். இந்த ஏரியாவிலும் தான் கில்லிதான் என்பதை பங்கேற்ற சில நிகழ்ச்சிகளிலேயே நிரூபித்துவிட்டார். கலக்கப்போவது யாரு, அது இது எது என அவர் கலக்காத நிகழ்ச்சிகளே இல்லை. சின்னத்திரையில் அவரது திறமையை பார்த்த தனுஷ் மாரி படத்தில் நடிகராக அறிமுகம் செய்துவைத்தார்.
பிஸியான நடிகர்: வெள்ளித்திரையில் பெரிய ஹீரோவின் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அந்தப் படத்துக்கு பிறகு பல படங்களில் நடித்தார். இதனால் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பெரிய திரையில் வளர்ந்தாலும் சின்னத்திரையையும் அவர் மறக்கவே இல்லை. தனியார் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் நடுவர், சிறப்பு விருந்தினராகவும் தொடர்ந்து பங்கேற்றுவந்தார்.

மருத்துவமனையில் அனுமதி: சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதிக அளவில் மது அருந்தியதன் காரணமாக அவர் சிகிச்சை பெறும் சூழ்நிலை உருவானது. ஒருவழியாக சிகிச்சை முடிந்து நல்லபடியாக திரும்பிய அவர்; புது மனிதராகவே காட்சியளித்தார். ஏகப்பட்ட படங்களில் கமிட்டானார். நிகழ்ச்சிகளிலும் பிஸியாக கலந்துகொண்டிருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் உடல்நலத்தில் பிரச்னை ஏற்பட்டது.
உயிரிழந்த ரோபோ சங்கர்: உடனடியாக அவரை குடும்பத்தினர் பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். எப்படியாவது அவர் உயிர் பிழைத்து வந்துவிடுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நேற்றிரவு 9.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சங்கரின் இந்த திடீர் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் தீராத சோகத்தில் தள்ளியிருக்கிறது.
கதறிய மனைவி: அவரது மரணத்தை கேள்விப்பட்டு செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை அனைவருமே தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். பலர் வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சங்கரின் உடலுக்கு நேரில் சென்று தங்களது இறுதி அஞ்சலியை செலுத்துகிறார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஷயத்தை கேள்விப்பட்ட உடனேயே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது சங்கரின் உடல் அருகே அமர்ந்திருந்த அவரது மனைவி, "உதயநிதி அண்ணா இன்னைக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க. அண்ணா அப்படி என்று அண்ணனிடம் உரிமையாக கேளு சங்கா. கலைமாமணி ரோபோ சங்கர். கலைஞர் கையால் கலைமாமணி வாங்கினேன் என்று பெருமையாக சொல்வியே" என்று கதறியபடி சங்கரின் உடலை பார்த்து கூறினார். அதனைப் பார்த்து அங்கிருந்த அனைவருமே கலங்கிப்போனார்கள்.


Click it and Unblock the Notifications











