"தெறி"... விஜய்யைக் கொண்டு போய் தண்ணீருக்குள் வைத்து... அட்லீயின் அதிரடி "ஷூட்"!
சென்னை: தெறி படத்தில் லேட்டஸ்ட்டாக நடிகர் விஜய்யை வைத்து தண்ணீருக்கு அடியில் சில முக்கியமான காட்சிகளை படம்பிடித்து இருக்கிறார் இயக்குநர் அட்லீ.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தெறி. இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் அட்லீ சில முக்கியமான காட்சிகளை தண்ணீருக்கு அடியில் வைத்து படம்பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் ஆகியோருடன் உதவியுடன் இந்தக் காட்சியை எடுத்திருக்கிறார் அட்லீ.
நடிகை எமி ஜாக்சனின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறந்து விட்டதால் அவரால் தற்போது தெறி படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் விஜய் - எமி ஜாக்சன் இடம்பெறும் ஒரு ரொமாண்டிக் பாடலின் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் எமியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து தெறி படக்குழுவினர் காத்து இருக்கின்றனராம்.

இந்த மாதத்துடன் தெறி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க ஒட்டுமொத்த படக்குழுவினரும் திட்டமிட்டு இருக்கின்றனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் தெறி தமிழ்ப் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











