ஜமீன் வாரிசு... ஆனாலும் ஏகப்பட்ட சோதனை... உயிரிழந்த நடிகர் சிவ நாராயணமூர்த்தியின் சோகங்கள்!
பட்டுக்கோட்டை: தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சிவ நாராயணமூர்த்தி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிவ நாராயணமூர்த்தி குறித்து யாரும் அறிந்திடாத சில உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன.

பட்டுக்கோட்டை சிவ நாராயணமூர்த்தி
பட்டுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட சிவ நாராயணமூர்த்தி, நேற்று முந்தினம் இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 250க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தியின் திடீர் மறைவு, திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகரும் இயக்குநருமான விசு தான், சிவ நாராயணமூர்த்தியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். முரளி ஹீரோவாக நடித்த பூந்தோட்டம் தான், சிவ நாராயணமூர்த்தியின் முதல் படமாம். அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ஜமீன் வாரிசு சிவ நாராயணமூர்த்தி
முரட்டு மீசை, கம்பீரமான உடல்வாகு, மிரட்டும் கண்கள் என வித்தியாசமான லுக்கோடு சினிமாவில் அறிமுகமான சிவ நாராயணமூர்த்தி, விவேக், வடிவேலு ஆகியோரது காமெடி கேங்கில் இடம்பிடித்தார். இருவருடனும் தலா 20 படங்களில் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தியின் காமெடி காட்சிகள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக போலீஸ் தொப்பை, கடனை திருப்பித் தரேன் தெய்வமே போன்ற வடிவேலு உடனான இவரின் கூட்டணியைப் பற்றி கேட்கவே வேண்டாம். சினிமாவில் இப்படி காமெடி நடிகராக வலம் வந்த சிவ நாராயணமூர்த்தி ஜமீன்தார் என்பது பலரும் அறியாத தகவலாகும்.

நிஜ வாழ்வில் வந்த சோதனை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த சிவ நாராயணமூர்த்தி, மிராசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அதீத கடவுள் பக்தி கொண்ட சிவ நாராயணமூர்த்தி, சிறு வயதிலேயே ஆன்மிகம், பொதுத்தொண்டு என நற்பணிகள் செய்து வந்துள்ளார். வில்லனாக நடிக்கத் தொடங்கி காமெடியனாக மாறிய சிவ நாராயணமூர்த்திக்கு நிஜ வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

வாய்ப்புத் தேடிய சிவ நாராயணமூர்த்தி
சிவ நாராயணமூர்த்தி புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் பில்டிங் தொழில் செய்து வரும் நிலையில், மகளை பி.இ படிக்க வைத்துள்ளார் சிவ நாராயணமூர்த்தி. சினிமாவில் நடித்து வந்த சிவ நாராயணமூர்த்தி, ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் பல லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் தனது சொத்துகளை விற்க முயன்றாராம். இப்படி பல சோதனைகளையும் கடந்து மக்களை சிரிக்க வைத்த சிவ நாராயணமூர்த்தியின் மறைவு, திரையுலகில் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











