'உன்னோடு கா'... மகனின் காதலைச் சேர்த்து வைக்கப் போராடும் பெற்றோரின் கதை!
தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் உன்னோடு கா. ஒரு தயாரிப்பாளராக அவருக்கு இது இரண்டாவது படம்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆர்கே இயக்கியுள்ளார். நேற்று இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அபிராமி மெகா மாலில் நடந்தது. அபிராமி ராமநாதன் இந்த விழாவிற்கு தலைமை தாங்க, இயக்குனர் ஆர்கே, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், இசை அமைப்பாளர் சத்யா, படத்தொகுப்பாளர் சேவியர் திலக் மற்றும் படத்தின் நடிகர்கள் ஆரி,மாயா, பிரபு, ஊர்வசி, பாலசரவணன், மிஷா கோஷல், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா மற்றும் பார்வதி ஆகியோர் பங்கேற்றனர்.

அபிராமி ராமநாதன்
"ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு தற்போது 'உன்னோடு கா' திரைப்படத்தின் மூலமாக நிஜமாகி உள்ளது. பொதுவாக காதலை எதிர்க்கும் பெற்றோர்களைத்தான் நாம் இதுவரை திரையில் கண்டுள்ளோம். ஆனால் இந்த படத்தில், மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பெற்றோர்களை ரசிகர்கள் காண்பார்கள். இது தான் இந்த 'உன்னோடு கா' திரைப்படத்தின் கதைக் கரு. ஆனால் இந்த கதை என்னும் சிற்பத்தை அழகிய வடிவில் செதுக்கியது இயக்குனர் ஆர்கே தான். எங்களுடைய முதல் சந்திப்பிலேயே நான் ஆர்கே வின் திறமையை பற்றி அறிந்து கொண்டேன். நான் அவர் மீது வைத்த நம்பிக்கை சற்றும் வீண் போகவில்லை," என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்.

ஆர்கே
இயக்குநர் ஆர்கே, " நான் ஒரு அறிமுக இயக்குனர் என்றாலும் எனக்கான முழு சுதந்திரத்தையும் கொடுத்தவர் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்தான். அந்த ஒரு காரணம் தான் என்னை இந்த படத்தில் முழு ஈடுபாடுடன் இறங்க செய்தது," என்றார்.

சக்தி சரவணன்
படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறுகையில், "அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற எண்ணம் கொண்டவர் அபிராமி ராமநாதன் அவர்கள். பத்து ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும், 120 ரூபாய் டிக்கெட்டுக்குரிய இருக்கையும் சமமாக இருப்பதை ஐயா ராமநாதன் அவர்களின் அபிராமி திரையரங்கில் மட்டும்தான் காண முடியும். மேலும், படத்தின் இசைக்கு ஏற்றவாறு நான் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்குவேன் என்று இசை அமைப்பாளர் சத்யாவிற்கு நான் கொடுத்த வாக்கு இப்போது நிறைவேறி உள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார். மேலும் இவர் மிக பெரிய ஹிட் படங்களான சென்னை 28, சரோஜா, சிவா மனசுல சக்தி, மங்காத்தா போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு - ஊர்வசி
படத்திற்கு இன்னும் அழகு சேர்ப்பது பிரபு மற்றும் ஊர்வசியின் பங்கு தான் என்பதை உறுதியாக சொல்லலாம். "நான் பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்திருந்தாலும், உன்னோடு கா திரைப்படத்தில் நடித்த அனுபவம் உண்மையாகவே மறக்க முடியாதது. படப்பிடிப்பு ஆரம்பமான முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை நடந்த ஒவ்வொரு காட்சியும் நான் ரசித்து, அனுபவித்து நடித்தேன்," என்றார் பிரபு.

ஊர்வசி
அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஊர்வசியோ, "என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு சந்தோஷங்களை இந்த திரைப்படம் எனக்கு கொடுத்துள்ளது. ஒன்று அபிராமி ராமநாதன்அவர்களின் திரைப்படத்தில் நடித்தது; மற்றொன்று வெகு நாட்களுக்கு பிறகு பிரபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது," என்று நெகிழ்ந்தார்.

ஆரி
நெடுஞ்சாலை திரைப்படத்தில் இருந்து முற்றிலும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் ஆரி இந்த படத்தில் நடித்துள்ளார். "ராமநாதன் படத்தில் நான் நடித்தது, எனக்கு கிடைத்த வரமாகத்தான் கருதுகிறேன். 'உன்னோடு கா' நிச்சயம் கோடைக்கால விடுமுறைக்கு ஏற்ற விருந்தாக அமையும் என நம்புகிறேன்!" என்றார் ஆரி.

டூப்பாடூ
மேலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரத்யோகமாக டூப்பாடூ இசை தளத்தில் வெளியிடப்பட்டது.
"நாங்கள் முதன் முதலாக எங்கள் தளத்தில் வெளியிடும் இசை ஆல்பம் 'உன்னோடு கா'. இந்த படத்தில் வரும் 'ஊதே ஊதே' என்னும் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 'ரா' என்னும் தமிழ் வார்த்தை 'தா' வாக இந்த பாடலில் உச்சரிக்கப்படுவது இந்த பாடலின் தனித்துவமான சிறப்பு. இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் சினிமா தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்; திரையரங்குகளில் முதன் முதலாக டிடிஎஸ் டெக்னாலஜியை கொண்டு வந்த பெருமை ராமநாதன் அவர்களையே சேரும்," என்றார் டூப்பாடூவின் நிறவுனர் மதன் கார்க்கி.


Click it and Unblock the Notifications











