உத்தமவில்லன் பட ரிலீஸ் பிரச்சினையில் அரசு தலையிடவில்லை… சரத்குமார்
சென்னை: உத்தம வில்லன் படம் ரிலீஸ் பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என சரத்குமார் கூறியுள்ளார். பட ரிலீஸ் பிரச்சினையில் 27 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து உத்தமவில்லன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளதாக சரத்குமார் தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோர் நடித்து, ரமேஷ் அரவிந்த் டைரக்ஷனில், டைரக்டர் லிங்குசாமியின் தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த படம், ‘உத்தம வில்லன்.' ரூ.55 கோடி செலவில் தயாரான பிரமாண்டமான படம் இது. தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் படம் வெளிவர இருந்தது.

ரிலீஸ் ஆவதில் சிக்கல்
தியேட்டர்களை ‘கட் அவுட்' மற்றும் தோரணங்களால் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தார்கள். மே 1ஆம் தேதி காலை 8 மணிக்கே முதல் காட்சி நடைபெற இருந்ததால், 5 மணிக்கே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கூடி விட்டார்கள். ‘பைனான்ஸ்' பிரச்சினை காரணமாக, ‘உத்தம வில்லன்' படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு தியேட்டர்களில் கட்டணத்தை திருப்பிக் கொடுத்தார்கள். ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
பேச்சுவார்த்தை
உத்தம வில்லன்' படம் ‘பைனான்ஸ்' பிரச்சினையால் வெளிவர தாமதம் ஆன விவகாரம், தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம்சேம்பர்' கட்டிடத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சார்பில் லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.
பைனான்சியர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விடிய விடிய பேச்சுவார்த்தை
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டு இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காலையிலும் படம் ரிலீஸாகவில்லை.
கமல் திரும்பினார்
உத்தம வில்லன்' படம் திரையிடப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதை தொடர்ந்து துபாயிலிருந்து நடிகர் கமல்ஹாசன் அவசரமாக சென்னை திரும்பினார். படம் இன்று காலையிலும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
சரத்குமார் அறிவிப்பு
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சரத்குமார் பேசுகையில், உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் படம் ரிலீஸாவது தாமதமானது. 27 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்பிரச்னையில் தமிழக அரசின் தலையீடு எதுவும் கிடையாது என்று கூறினார்.
ட்விட்டரில் ரசிகர்கள்
படம் ரிலீஸ் ஆனதையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். கமல் வந்த உடன் உத்தமவில்லன் கிக் ஸ்டார்ட் ஆகியுள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











