வாலு... ட்விட்டரில் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுக் கொண்ட சிம்பு - உதயநிதி
சென்னை: வாலு படத்தின் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் தீர்ந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், அனேகமாக படம் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வாலு படத்தை வெளியிட முடியாமல் சிலர் தடுத்து என்னை கீழிறக்க முயற்சிக்கின்றனர். ஆனால் என்மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும் கடவுளிற்கும் நீங்கள் ஒருநாள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக யாரையோ சாடியிருந்தார்.
மேலும் வாழு வாழ விடு என்று ஒரு தத்துவத்தையும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உதிர்த்திருந்தார்.
என்ன காரணம் என்று விசாரித்ததில் ஆகஸ்ட் 14 ம் தேதி வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படம் வெளியாகிறது, இந்தப் படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வாங்கி வெளியிடுகிறார்.
இந்தப் படத்திற்காக அதிகமான திரையரங்குகளை உதயநிதி புக் செய்து வைத்திருக்கிறார், எனவே வாலு படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாலு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத விவகாரத்தில் சிம்பு ரசிகர்களும் உதயநிதி ரசிகர்களும் காரசாரமாக நேற்று ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் எல்லாப் பிரச்சினைகளும் கடவுள் அருளால் தீர்ந்து விட்டது. ஏதேனும் பிரச்சினை என்றால் நான் கண்டிப்பாக உங்களிடம் கூறுவேன் எனவே அமைதியாக இருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் வாலு படவிவகாரத்தில் மேலும் ஒரு திருப்பமாக நான் எந்த நடிகருக்கோ அல்லது நடிகர்களின் ரசிகர்களுக்கோ எதிரானவன் அல்ல, ஒரு அடிப்படை உண்மையை மறந்து விடாதீர்கள். அடுத்தவர்களைக் குறை சொல்லுவதற்கு முன்பு மூளையை உபயோகப் படுத்துங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
இதனால் சிம்பு மற்றும் உதயநிதி இருவரின் ரசிகர்களும் மிக வன்முறையாக ட்விட்டரில் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











