Vadivelu Birthday: வைகைப்புயல் காமெடியன் மட்டும் இல்லைங்க.. அந்த திறமையை அதிகம் வெளிக்காட்டலாமே வடிவேலு!
சென்னை: வைகைப்புயல் வடிவேலுக்கு 65 வயது ஆகிவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அண்மையில் அவரது நடிப்பில் வெளியான மாரீசன் படத்தைப் பார்க்கும்போது கூட வடிவேலுக்கு 65 வயது ஆகிவிட்டது என்று ரசிகர்கள் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி வடிவேலு தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது திரைவாழ்க்கையில் அவர் எப்படி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வடிவேலுவை நகைச்சுவைக் கலைஞராக மொத்த தமிழ் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர் நகைச்சுவைக் கலைஞர் மட்டுமா? சோகத்தில் இருப்பவர்களை துக்கத்தை மறந்து சிரிக்க வைக்கும் காமெடி அவருக்கு தண்ணி பட்ட பாடு. அதே நேரத்தில் வடிவேலு தனது திரையுலக வாழ்க்கையில் காமெடியனாக, காமெடி கதாநாயகனாக, வெகு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக ஜொலித்துள்ளார். இதில் பெரும்பான்மையாக காமெடியனாக அவருக்கு பேரும் புகழும் கிடைத்ததால், அவர் காமெடியனாகவே அறியப்படுகிறார். ஆனால் வடிவேலுவை காமெடியனாக நினைத்தால் நாம் தான் காமெடியன்.

பாடகராக அவர் கணிசமான அளவே பங்களிப்புச் செய்திருந்தாலும் அதன் மூலம் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. நடிகனாக அவர் அறிமுகமான என் ராசாவின் மனசினிலே படத்திலேயே போட போட புண்ணாக்கு என்ற பாடலைப் பாடி பாடகராகவும் கால் பதித்தார். அதன் பின்னர் அவருக்காகவே சில பாடல்கள் எழுதப்படும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். எட்டணா இருந்தா எட்டு ஊரு என் பேச்சைக் கேட்கும் பாடலைப் பாடியது மட்டும் இல்லாமல் அந்த பாடலில் அட்டகாசமான நடனத்தையும் வெளிப்படுத்தி இருப்பார்.
இவரது குரலில் உருவான பாடல்களில் பல பெற்றோர்களுக்கும் நிம்மதியைக் கொடுக்கும் பாடல் என்றால் அது, " சந்தன மல்லிகையில் தூரி கட்டிப் போட்டேன்" என்ற பாடல் தான் . அந்த பாடலை இசைக்க செய்துவிட்டு குழந்தையை லேசாக தட்டிக் கொடுத்தால் போதும் குழந்தை அந்த பாடல் முழுவதுமாக முடிவதற்குள் தூங்கிவிடும்.
பாடகர்: தான் அடிப்படையில் காமெடியன் என்பதால் நகைச்சுவைத் தன்மை கொண்ட பாடல்களை மட்டும் பாடாமல், சந்தன மல்லிகையில் போன்ற பக்தி கலந்த தாலாட்டுப் பாடல் தொடங்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படமான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற ராசகண்ணு என்ற மிகவும் வலியை சுமந்து வரும் பாடலையும் பாடி கண்கலங்க வைத்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மாரீசன் படத்தில் இடம் பெற்ற பாடலான 'ஒரே ஒரு மூச்சு தான்டி' பாடலும் உருக வைக்கிறது. வரும் காலங்களிலாவது அடிக்கடி பாடல்களைப் பாடி தனது திறமைக்கு அதிக தீனி போட வேண்டும்.

சந்தேகமே வேண்டாம்: வைகைப்புயல் வடிவேலு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். இதில் இடையில் ஒரு 10 ஆண்டுகள் அவருக்கு சோதனைக் காலம் என்று குறிப்பிட்டாலும் கூட, அவர்தான் நடிக்காமல் இருந்தாரே தவிர, ரசிகர்கள் அவரைக் கொண்டாடாமல் இல்லை. நாம் இல்லை என்றால் இந்த ரசிகர்கள் நம்மைக் கொண்டாடுவார்களா? இல்லை ஒதுக்கி வைத்துவிடுவார்களா? புதுமுக நடிகர்கள் வந்துவிட்டால் நமது காமெடிகள் பழையதாக கருதப்பட்டுவிடுமோ என்று எல்லாம் ஒரு வேளை யோசித்து இருக்கலாம்.
தெம்பு: இந்த கேள்விகளுக்கு எல்லாம், 10 ஆண்டுகள் சோதனையை வடிவேலு எதிர்கொண்ட போது ரசிகர்கள் அவரை எப்படி கொண்டாடினார்கள், அவரை எப்படி மிஸ் செய்கிறார்கள் என்பதை அந்த காலகட்டத்தில் வடிவேலு ஒருவேளை உணர்ந்திருக்க கூடும். நீங்கள் என்றைக்குமே வைகைப்புயல் தான். நீங்கள் தெம்பாக இருப்பது என்பது பல கோடி ரசிகர்களுக்கு தெம்பு தரக்கூடிய ஒன்று. அப்படியான தெம்புடன் நீங்கள் எப்போதும் வலம் வர பிலிமி பீட்டின் சார்பாக வாழ்த்துகிறோம்.


Click it and Unblock the Notifications











