காணாம போன சங்க கட்டடம் கிடைச்சிடுச்சிய்யா!- நடிகர் வடிவேலு
சென்னை: காணாமல் போன நடிகர் சங்கக் கட்டடம் இப்போ கிடைச்சிடுச்சிய்யா... என்று கூறினார் நடிகர் வடிவேலு.
நடிகர் சங்கத் தேர்தலின்போது, விஷால் அணியை ஆதரித்துப் பேசிய வடிவேலு, 'ஒரு படத்துல கிணத்தைக் காணோம்னு நானே நடிச்சிருக்கேன். இங்க என்னடான்னா, நடிகர் சங்கக் கட்டடமே காணாம போயிருச்சேய்யா' என்றார்.

தேர்தலில் வென்ற பிறகு இப்போது நடிகர் சங்க இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான வேலைகளை விஷால் உள்ளிட்டோர் தொடங்கியுள்ளனர்.
நேற்று நடந்த நடிகர் சங்கப் பொதுக் குழுவில் நடிகர் சங்கக் கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பு வெளியிடப்பட்டது. அதனை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பேசிய நடிகர் வடிவேலு மைக்கைப் பிடித்ததுமே, "காணாம போன நடிகர் சங்கக் கட்டடம் கிடைச்சிடுச்சிய்யா.....' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "தங்கள் முயற்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி உழைத்து வருகின்றனர் நாசர், விஷால், சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள். பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு திருப்பணி. நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். புதிதாகத் திறக்கப்படவிருக்கும் கட்டடத்தில் நாம் அனைவரும் காலடி எடுத்து வைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











