திரும்ப வரக் கூடாதுன்னு நிறைய பேர் இடைஞ்சல் கொடுத்தாங்க: கொதித்தெழுந்த வடிவேலு
சென்னை: வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் சுராஜ், வடிவேலு இருவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு வந்த தடைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் 3வது சிங்கிள்
ரெட் கார்டு பிரச்சினை உட்பட பல்வேறு சிக்கல்களை கடந்து மீண்டும் நடிப்பில் பிஸியாகியுள்ளார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம், வரும் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், மூன்றாவது பாடலும் தற்போது வெளியாகியுள்ளது.

டீசண்ட்டான ஆளு
சந்தோஷ் நாராயணன் இசையில் 'டீசண்டான ஆளு' எனத் தொடங்கும் இந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். ஏற்கனவே வெளியான முதல் இரண்டு பாடலகளையும் வடிவேலுவே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வெளியான 'டீசண்ட்டான ஆளு' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே வடிவேலும் இயக்குநர் சுராஜும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

வடிவேலு மீது பொறாமை
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. ஆனால், இந்த ட்ரெய்லர் குறித்து நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்திருந்தனர். மேக்கிங்கில் சுவாரஸ்யம் இல்லை என கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "வடிவேலு மிகப் பெரிய நடிகர் என்பதை மறந்துவிட்டு பலரும் பேசி வருகின்றனர். வட்டார வழக்குகளிலும் வித்தியாசமான பாடி லேங்குவேஜ் செய்தும் நம்மை சிரிக்க வைத்தவர். அவர் திரும்பி வரும் போது நாம் தான் வரவேற்பு கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே சில வடிவேலு கம்பேக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பொறாமை கொள்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.

நிறைய இடையூறுகள் இருந்தன
தொடர்ந்து பேசியுள்ள சுராஜ், "ஆனால், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட கண்டிப்பாக காமெடியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய வடிவேலு, "சுராஜுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் கொடுத்த நாய் சேகர் பாத்திரம் தான் இந்தப் படத்தை எடுக்க காரணமாக அமைந்தது. முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் முடிவு செய்தோம். ஆனால், அது கிடைக்கவில்லை. அதனால் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என டைட்டிலை மாற்றினோம். அப்படி இருந்தும் எங்கிருந்தெல்லாமோ இந்த டைட்டிலுக்கும் படத்துக்கும் பிரச்சினை கொடுத்தார்கள். அதையெல்லாம் மீறி இன்று படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது" எனக் கூறினார்.

சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி
அதேபோல், இந்தப் படத்தை தயாரித்துள்ள லைகா, நிறுவனத்துக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிய சந்தோஷ் நாராயணனுக்கும் வடிவேலுவும் சுராஜ்ஜும் நன்றி தெரிவித்தனர். சந்தோஷ் நாராயணன் கண்டிப்பாக இந்தப் படத்துக்கு நான் தான் இசையமைப்பேன் என அடம்பிடித்து பணியாற்றினார். இந்த மாதிரியான நல்ல டீம் அமைந்ததே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பெரும் வெற்றிதான் எனக் கூறினர்.


Click it and Unblock the Notifications