உடலுக்கு வயதாகிவிட்டது… உள்ளத்திற்கு ஆகவில்லை… கவிஞர் வைரமுத்து!
சென்னை: எங்களுக்கு வயதாகிவிட்டது ஆனால் இதயத்திற்கு வயதாகவில்லை என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது ஒரு பொன் மாலைப்பொழுது.. என பாடல் எழுதத் தொடங்கிய கவிஞர் வைரமுத்து, பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத அசையும் சொத்தாய் திகழ்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வைரமுத்து ஏஆர்.ரகுமான், மணிரத்னம் என மூன்று முத்துக்களை இணைத்து முதன்முதலில் அழகு பார்த்தது. அதன்பிறகு 26 ஆண்டுகளாய் பல முத்தான பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது இவர்களின் கூட்டணியில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியாக உள்ளது.

மரியாதை
26 வருடங்களாக இந்த அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை வைரமுத்து உடைக்கிறார். அவர் சொல்லும் முக்கியமான காரணம் 'மரியாதை'. நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய கருத்துகளுக்கு மரியாதை அளிப்போம். முன்னால் மட்டுமே பேசுவோம் பின்னல் பேசமாட்டோம். ஒரு கலைப் படைப்பை தரமாக கொடுப்பதற்கான கல்வியறிவு எங்களிடம் உள்ளது. இதையெல்லாம் தாண்டி காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் எங்களை நாங்கள் புதுப்பித்துக்கொள்கிறோம். ஏனென்றால் ஒரு கலை வடிவம் என்பது காலத்தின் உலியால் செதுக்கப்படுவது. எங்களுக்கு வயதாகிறது ஆனால் எங்களின் உள்ளம் இளைமையோடுதான் உள்ளது.

புதுமைச் சிறகு
நான் இல்லாமல், மணிரத்னத்துடன் இணைந்து ரகுமானால் சிறந்த பாடலை கொடுக்க முடியும், அதேபோல் அவர்களில்லாமலும் என்னால் தனித்து செயல்பட முடியும். ஆனால், நாங்கள் மூவரும் ஒன்றிணையும்போது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. புதுமைக்கான சிறகு விரிகிறது. அதனால் வெற்றியும் பெரிதாகிறது என்கிறார் வைரமுத்து.

பாம்பே படம்
நமக்குள் இருக்கும் மாறுபட்ட கருத்துகள் ஒரு செயலை இன்னும் ஆழமாக சிந்தித்து சரியான பாதையில் செய்ய உதவும். இரண்டுபேர் இருந்தால் அங்கு இரு மூளைகள் உள்ளன. அப்போது இரண்டு விதமான சிந்தனைகள் இருக்கும். அதுவே மூன்றாகும்போது முடிவு சிறப்பாக இருக்கும். பாம்பே திரைப்படத்தில் உள்ள கண்ணாளனே பாடலில் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்கு பிடித்துவிட்டது. ஆனால், அப்பாடல் ஆரம்பிக்கும் வார்த்தையில் இருவருக்கும் திருப்தி இல்லை. கண்ணாளனே என்ற வார்த்தைக்கு பதிலாக என் ஜீவனே, என் நாதனே, என் தேவனே போன்ற பதினாறு வார்த்தைகளைக் கொடுத்தேன். அதில் எதுவுமே அவர்களுக்கு பிடிக்க வில்லை. அதன்பிறகுதான் கண்ணாளனே என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், அதை அவர்கள் மிகவும் ரசித்து ஏற்றுக்கொண்டனர். அந்த பாடல் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போக ரகுமானை பாராட்டினார். எங்களுடைய கருத்து மோதல்கள் இப்படித்தான் இருக்கும்.

வற்புறுத்தல்
செக்க சிவந்த வானம் திரைப்பட பின்னணி இசைக்கோர்ப்பை ரகுமான் அமெரிக்காவிலிருந்து செய்துகொண்டிருந்தார். எல்லா பாடல்களையும் எழுதி கொடுத்துவிட்டேன். ஆனாலும் ஒரு பாடலுக்கு புதிய ட்யூனை அனுப்பி மெட்டெழுதச் சொன்னார்கள். அப்போது நான் கலைஞரின் புகழஞ்சலி விழாவுக்கான ஏற்பாட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன் நேரமே இல்லை. ஆனால் மணிரத்னம் உடனடியாக பாடல் வேண்டுமென வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் சில மணி நேரம் உட்கார்ந்து பாடலை எழுதி அனுப்பி விட்டேன். அடுத்த பதினாறு மணி நேரத்தில் அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக அவர்கள் என்னை அவசரப்படுத்த மாட்டார்கள். இம்முறை வேறு வழியில்லாமல் இப்படி நடந்துவிட்டது. எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, எங்களுடைய பழைய படைப்புகளை பிரதியெடுக்காமல் பார்த்துக்கொள்வதான் எனக் கூறுகிறார் வைரமுத்து.


Click it and Unblock the Notifications











