'தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்'...எதற்காக இப்படி சொன்னார் வைரமுத்து
சென்னை : தமிழ் சினிமா மற்றும் தமிழ் இலக்கிய உலகில் தலைசிறந்தவராக விளங்கி வருகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.இவர் 2019 ம் ஆண்டிற்கு பிறகு சினிமாவில் அதிகம் பாடல்கள் எழுதுவதில்லை. தற்போது லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்திற்கு வைரமுத்து பாட்டெழுதி உள்ளார்.

கவிஞர் வைரமுத்து புதிய முயற்சியாக 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 டைரக்டர்கள் தனது வரிகளில் உருவான பாடல்களாக நாட்படு தேறல் என்ற பாடல் தெகுப்பை உருவாக்கி வருகிறார். இதன் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகமாக வாரம் ஒரு பாடல் வீதம் வெளியிடப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்நிலையில் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதே சமயம் தான் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்ததன் 50 வது ஆண்டு பொன்விழா ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறார். இதனால் இந்த ஆண்டு பிறந்தநாள் அவருக்கு குடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ''கள்ளிக்காட்டு இதிகாசத்தை படமாக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் என்னிடம் கேட்டார்கள். தொலைக்காட்சி தொடராக இயக்கலாமா என்று பாரதிராஜா என்னை கேட்டார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஏனென்றால் ஒரு நாவல் படமாக்கப்படுகின்ற போது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படும். ஒன்று அந்த நாவல் இருப்பதைவிட சிறப்பாக எடுத்துக்காட்டுவது. அல்லது நாவலில் இருப்பதை விட அது குறைவாக மாறிவிடுவது.
உதாரணமாக 'பார்த்திபன் கனவு' என்ற கல்கியின் நாவல் நாவலாக இருந்ததை விட படமாக வந்த பொழுது அந்தப் படைப்பின் உயரம் சற்று குறைந்து போனது. ஆனால் 'ஏழை படும்பாடு' என்று தமிழில் வந்த நாவல் படமாக்கப்பட்ட போது மாபெரும் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள் வெற்றி பெற்றது. தில்லானா மோகனாம்பாள், ஏழை படும்பாடு என்ற உயரத்தில் கள்ளிக்காட்டு இதிகாசமும் படைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். காலம் கனிய வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு 'நான் இந்த கேள்விக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறேன்' என கூறி கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவும் வைரமுத்து பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டார்கள். பல ஆண்டுகளாக இவர்கள் இணைந்து பணியாற்றவேயில்லை. இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இளையராஜாவுக்கு கெளரவ எம்பி பதவி வழங்கி இந்திய அரசு கெளரவப்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து சொன்ன நிலையில் வைரமுத்து அது பற்றி பேசவில்லை. தற்போது செய்தியாளர் சந்திப்பிலும் இளையராஜா பற்றிய கேள்வியை வைரமுத்து தவிர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











