‘கடிவாளம் இல்லாத குதிரை நீ...’ தாதாசாகேப் விருது பெற்ற குல்சாருக்கு வைரமுத்து வாழ்த்து
சென்னை: தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு, கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசால் வழங்கப் படும் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பிரபல பாடலாசிரியர் குல்சார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறைக்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப் படுகிறது. குல்சார் ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ள குல்சாருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமகாலப் படைப்பாளியின் வாழ்த்து...
கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர் என்று பன்முக படைப்பாளியாக விளங்கும் குல்சார், தாதா சாகேப் பால்கே விருது பெறுவது குறித்து ஒரு சமகாலப் படைப்பாளி என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன், வாழ்த்துகிறேன்.

புல்லின் மீது பூ விழுவது போல...
அவர் கவிதைகளைப் போலவே அவரும் மென்மையானவர். புல்லின் மீது பூ விழுவது போல ஓசையில்லாமல் பேசுகிறவர்.

நண்பேன்டா...
சக படைப்பாளிகளை மிச்சமில்லாமல் பாராட்டுகிறவர். தலைமுறைகள் கடந்து நேசிக்கப்படுகிற பாடல்களுக்கும் நட்புக்கும் சொந்தக்காரர்.

நீண்ட பயணம்....
சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன் தொடங்கி ஏ.ஆர்.ரகுமான், சங்கர் மகாதேவன் வரைக்கும் நீண்ட பயணம் செய்து நிலைத்தவர்.

கவிதை உலகில் நீர்த்துப் போகாதவர்...
கவிதைக்கும் பாடலுக்குமான தூரத்தைக் குறைத்ததில் குல்சாருக்கு பெரும் பங்கு உண்டு. திரைத்துறையில் பெரும்பணி ஆற்றினாலும் கவிதை உலகில் நீர்த்துப்போகாதவர்.

கஜல் பாடல்கள் புனைவதில் வல்லவர்...
உருது மொழியில் கஜல் பாடல்கள் புனைவதில் வல்லவர். அவரது பாடல் ஒன்றை நான் முன்பே மொழிபெயர்த்திருக்கிறேன். காதலன் பிரியப்போகிறான்; காதலி அழுது பாடுகிறாள்.

இதோ அந்த கவிதை...
‘‘புயலில் ஆடும் மரம் நான்
என் அடியில்
கடிவாளம் இல்லாத குதிரை நீ
புயல் ஓயும் போது
நான் தரையில்
நீ எங்கோ மறுகரையில்''

பாராட்டு...
எம் சமகாலத்தின் மூத்த கவிஞருக்குத் திரைத்துறைக்கான உச்ச விருது வழங்கியிருக்கும் மத்திய அரசை பாராட்டுகிறேன். சகோதரர் குல்சாருக்கு என் வாழ்த்துப் பூக்களை தூரத்தில் இருந்தே தூவுகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











