நெல்லை பாரதி மறைவு.. ஒரு துக்கம் நிறைந்த நாளாக மாறியது.. வைரமுத்து இரங்கல் !
சென்னை : நெல்லை பாரதியின் மரணம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நெல்லை பாரதி என் பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களில் ஒருவர். அவரின் இழப்பு என்னைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இறப்பதற்கான வயதும், காரணமும் என் கவலையைக் கூட்டுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார் பாரதி. ஒரு ஆவணப்படத்திற்காக என்னைப் பேசச் சொன்னார். சர்க்கரை நோயால் ஒரு காலை இழந்து "ஒற்றைக் காலில் நிற்கிறார் என் பாரதி; ஆனாலும் சொந்தக் காலில் நிற்கிறார்" என்று சொன்னேன்.
பாரதி தன் மரணத்தின் மூலம் சில முக்கியச் செய்திகளை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். சர்க்கரை நோய் இருந்தால் உடல் குறித்து அக்கறை இருக்க வேண்டும். கொரானாவை விடக் கொடியது மது. இந்தப் பாடத்தை தன் சமூகத்திற்கு விட்டுப் போயிருக்கிறார் பாரதி. இது மறைந்தவரை குறைத்துச் சொல்வதற்கு அல்ல. இருப்பவரை மதித்துச் சொல்வது.
பாரதியை இழந்து தவிக்கும், குடும்பத்தாருக்கும், பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைரமுத்து .

மற்றொரு பக்கம் சீனியர் பத்திரிகையாளர் என்ற முறையில் நல்ல எழுத்தாளர் என்ற முறையில் விஜய் சேதுபதி நேரில் சென்று ஆறுதல் கூறினார். விஜய் சேதுபதி வணங்கி கொடுத்த அன்பு பரிசான ஒரு காரில் தான் கடைசி வரைக்கும் நெல்லை பாரதி சென்னை வீதிகளில் வலம் வந்தார்.
ஊடக துறை சார்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். நல்ல எழுத்தாளர்கள் மறைந்தாலும் அவர்கள் எழுதிய எழுத்தும் சமூகத்தின் மீது காட்டிய அக்கறையும் என்றும் மறையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











