ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட வைரமுத்துவின் உறவினர் சீமான் கைது
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரான சீமான் டுடோரியல் நிறுவனத்தின் தலைவர் சீமான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
சீமான் சென்னையில் டுடோரியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் உறவினரும் கூட.
தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் சீமானை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு பலமுறை சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சி நடந்து வந்ததால், அவர் விசாரணைக்கு ஆஜரகாவில்லை.
இதையடுத்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் போலீஸ் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சீமானைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த சீமான் கைது செய்யப்பட்டு ஆண்டிப்பட்டி கொண்டு செல்லப்பட்டார்.


Click it and Unblock the Notifications











