ரோபோ சங்கர் மரணம்.. அவர் மனைவி பற்றி வனிதா விஜயகுமார் என்ன சொல்லிருக்காங்க?.. கலங்கிட்டாரே
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது சங்கரின் மனைவி பிரியங்கா நடமாடிய காட்சி பலரையும் கலங்க வைத்தது. இந்நிலையில் வனிதா விஜயகுமார் உருக்கமாக பேசியிருக்கிறார்.
தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தை ஏற்று கலக்கியவர் ரோபோ சங்கர். அந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு வேதாளம், வாயை மூடி பேசவும், இதற்குத்தானே ஆசைப்பட்டய் பாலகுமாரா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனக்கான பாதையை வலுப்படுத்தி சரசரவென்று முன்னேறினார் சங்கர். அடுத்ததாக அவர் ஈகோ ராமன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருந்தார்.
உடல் நலக்குறைவு: சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்புவரை சென்ற அவரை குடும்பத்தினரும், மருத்துவர்களும், நண்பர்களும் மீட்டுக் கொண்டு வந்தார்கள். அதனையடுத்து தீய பழக்கங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டவர் கரியரில் முழு கவனத்தையும் செலுத்தினார்.

உயிரிழந்த ரோபோ: நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருந்த அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் சென்னை பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த கலைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ரோபோ சங்கருக்கு நடந்த இறுதிச் சடங்குகள்: வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். பிறகு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது அவரது மனைவியான பிரியங்கா நடனமாடி தனது கணவரை வழி அனுப்பி வைத்தார். சங்கரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
வனிதா விஜயகுமார் இரங்கல்: இந்நிலையில் நடிகையும் இயக்குனருமான வனிதா விஜயகுமார் ரோபோ சங்கரின் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசினார். அப்போது பேசிய அவர், "பத்து நாட்களுக்கு முன்பாக அவரை நேரில் பார்த்தேன். ஆரோக்கியமாகத்தான் இருந்தார். ஆனால் மீண்டும் மஞ்சள் காமாலை அறிகுறிகள் வந்ததாக சொன்னார்கள். ஏற்கனவே அவரை காப்பாற்றியது அவரது மனைவி பிரியங்காதான்.
எப்படி ஓட்டுவாங்க?: அந்த சமயத்தில் சங்கருக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவர் காப்பாற்றப்பட்டதில் முழு க்ரெடிட்ஸும் மனைவிக்குதான் செல்லும். குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார். ரோபோ சங்கர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் நான் உடைந்து அழுதுவிட்டேன். நேரில் செல்வதற்கு தைரியம் இல்லை. அந்தப் பெண்ணின் முகத்தை எப்படி பார்ப்பேன் என்றும் தெரியவில்லை. பிரியங்காவை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது. இனி 40 வருடங்களை எப்படி அவர் ஓட்டப்போகிறாரோ. ஒன்றும் சொல்வதற்கு இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











