பபபா, இஅமுகு இதெல்லாம் ஓகே... ‘சிவா மனசுல புஷ்பா’னு பேர் வச்சா தப்பா? : வாராகி ஆவேசம்
சிவா மனசுல புஷ்பா படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் சென்சார் போர்டுக்கு, நடிகர் வாராகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சிவா மனசுல புஷ்பா படப்பெயரை மாற்றச் சொல்லி தொடர்ந்து நெருக்கடி வருவதாகவும், உரிய நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் வாராகி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காரணம் இதே பெயரில் உள்ள சில முக்கிய கட்சித் தலைவர்கள் இருவர் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது தான். இப்படத்தின் போஸ்டர்களிலும் நடிகர்கள் ஏறக்குறைய அதே போன்று போஸ் கொடுக்க, பிரச்சினை தீவிரமானது. பிரச்சினைகளும், எதிர்ப்பும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
இந்நிலையில் சென்சாரில் பிரச்சினை ஏற்பட்டதால் இப்படம் ரிலீஸ் ஆவதே தற்போது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால், எப்படியும் நீதிமன்றம் வரை சென்றாவது இப்படத்தை ரிலீஸ் செய்வது உறுதி எனத் தெரிவித்துள்ளார் வாராகி.
இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:

சம்மதம்:
"கடந்த ஜூலை-16ஆம் தேதி 'சிவா மனசுல புஷ்பா படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். படமே ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தான். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக படத்தை பற்றி அதிகாரிகள் விவாதித்தார்கள். சில வசனங்களை மியூட் செய்ய சொன்னார்கள், சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். நானும் அதற்கு சரி என்று சொன்னேன்.

தலைப்பை மாற்ற வேண்டும்:
ஆனால் எனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. மீண்டும் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, சென்சார் போர்ட் தலைவருக்கு படத்தை அனுப்பியிருப்பதாகக் கூறினார்கள். பின்னர் எனக்கு வந்த நோட்டீசில், படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்லியுள்ளார்கள். ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை.

காரணம் கூற மறுப்பு:
சென்சார் போர்டு விதிமுறைகளின் படி படத்தின் தலைமைப்பை மாற்றச் சொல்லும் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு இல்லை. அதேநேரத்தில், ஏன் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை கூற மறுக்கிறார்கள். சிவா, புஷ்பா ஆகிய பெயர்கள் என்ன தடை செய்யப்பட்டவைகளா? அப்படி என்ன தவறு இருக்கிறது அந்த தலைப்பில்.

சிறுபடங்களுக்கு பாரபட்சம்:
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துக்கு மட்டும் எப்படி தலைப்பை மாற்றச் சொல்லாமல் அப்படியே சான்றிதழ் அளித்தார்கள். ரஜினியின் கபாலி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தும், அதற்கு எப்படி யு/எ சான்று வழங்கினார்கள். அதேபோல பல்லு படாமா பாத்துக்கனு ஒரு படம் எடுக்கப்படுது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரு விதமாகவும், சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு விதமாகவும் சென்சார் போர்ட் உறுப்பினர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள்.

என்ன தவறு?
திரைப்படத்துறைக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் தான் சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களால் எப்படி படத்துக்குசரியாக சான்று அளிக்க முடியும். சிவா மனசுல புஷ்பா என்ற தலைப்பில் என்ன தவறு இருக்கிறது. நான் யாரையும் குறிப்பிட்டு இந்த பெயரை வைக்கவில்லை. அவர்களாக எதையாவது பொருத்திப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

கோரிக்கை:
புஷ்பா புருஷன் யாருன்னு கூட பெயரை மாற்றலாம் தான். ஆனால் காரணமே இல்லாமல் நான் ஏன் அதை செய்ய வேண்டும். நான் தற்போது மேல்முறையீடு செய்துள்ளேன். அதிலும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றம் சென்றாவது படத்தை நிச்சயம் வெளியிடுவேன். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கமும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என வாராகி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











