இவங்கள்லாம் பத்திரிகைகாரங்கன்னு வேற சொல்லிக்கிறாங்க! - வரலட்சுமி காட்டம்
பத்திரிகைகாரர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார் சரத்குமார் மகள் வரலட்சுமி. காரணம் அவரைப் பற்றி வந்த ஒரு செய்தி.

நடிகர் சங்கத் தேர்தலில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் ஒரு அணியாகவும், நெருங்கிய நண்பரான விஷால் எதிர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். தினசரி அறிக்கைப் போர் நடத்தி வருகிறார்கள் இரு தரப்பினரும்.
இந்த நிலையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையில், 'வரலட்சுமியின் தாயார் சாயா தேவியை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். அந்த கோபம் வரலட்சுமிக்கு இன்னமும் உள்ளது. அதற்கு பழிவாங்கும் வகையில் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார் வரலட்சுமி," என்று குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதைப் படித்து கடுப்பான வரலட்சுமி, ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார் பத்திரிகையாளர்களை. "இந்த முட்டாள்தனமான கட்டுரைக்கு நான் எப்படி ரியாக்ட் செய்வது? இவர்களெல்லாம் தங்களை பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு விஷயத்தில் உண்மை என்னவென்று தெரியவில்லை என்றால், அதைப் பற்றி எழுதும் உரிமை யாருக்கும் இல்லை.
இன்னொரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் என் தந்தையைத்தான் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, எப்போதும் ஆதரிப்பேன்," என்று கூறியுள்ளார் வரலட்சுமி.


Click it and Unblock the Notifications











