நீங்கள் மதிக்கும் தலைவர் பெயரை கிண்டல் செய்தால் ஏற்பீர்களா? துல்கருக்கு தயாரிப்பாளர் கேள்வி!
சென்னை: நீங்கள் மதிக்கும் தலைவரின் பெயரை வைத்து கிண்டல் செய்தால், ஏற்றுக்கொள்வீர்களா? என்று நடிகர் துல்கர் சல்மானுக்கு பிரபல தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இதை அனூப் சத்யன் இயக்கி இருந்தார்.
சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி, மேஜர் ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

மீண்டும் சர்ச்சை
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையானது. இதையடுத்து அவரிடம், துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டார். இப்போது, மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

மன்னிப்பு கேட்டார்
படத்தில், நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து காமெடி காட்சி அமைத்துள்ளனர். இந்த பெயரை நாய்க்கு எப்படி வைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். துல்கர் சல்மானையும் சரமாரியாக விளாசினர். அவர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் மன்னிப்புக் கேட்டார்.

மந்திரச் சொல்
இந்நிலையில் அவருக்கு கண்டனம் தெரிவித்து 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல. உலகத் தமிழர்களை இணைக்கும் மந்திரச் சொல். அந்தப் பெயரை மலையாளப் படத்தில் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அனைத்து மலையாளப் படங்களும் தமிழ்நாட்டிலும் வெளியாகத்தான் செய்கிறது.

காயப்படுத்த முடிகிறது?
அங்குள்ள நடிகர்கள், நடிகைகள் இங்கும் நேரடிப் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி உங்களால் எங்கள் தமிழ்த் தலைவனை குரூர புத்தியில் சிந்திக்க முடிகிறது? எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்த முடிகிறது? 1988ல் பட்டண பிரவேஷம் என்ற படத்தில் காமெடியாக பிரபாகரன் பெயரை அலட்சியமாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்த படத்தின் இயக்குநர் இந்த 'வருணே அவஷியமுண்டு' இயக்குநர் அனூப்பின் தந்தை.

உணர்வுள்ள தமிழர்கள்
நாங்கள் எங்கள் படத்தில் கேரளாவில் நீங்கள் மதிக்கும் தலைவர்களின் பெயரை பன்றிக்கு வைத்தால் பொறுத்துக் கொள்வீர்களா? கேரள முதல்வர் பிணராயி விஜயனை கொண்டாடி வருகிறோமே, உங்களுக்குள் மட்டும் ஏன் இந்த மட்டம் தட்டும் எண்ணம் தொடர்ந்து கொண்டே வருகிறது? உணர்வுள்ள தமிழர்களாக நாங்கள் செயல்படும் நேரம் தொடங்கிவிட்டது.

இயக்குனர் மன்னிப்பு
தவறுகளை உணரச் செய்வோம். அந்தப் படத்திலுள்ள சம்பந்தப்பட்ட காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆன்லைன் வெளியீட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரதியிலும் கூட. அதே நேரம் துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











