Vijay: விஜய்யால் தாக்குபிடிக்க முடியாது.. MGR காலத்தைப் போல மக்கள் இல்லை. MP திருமாவளவன் பளிச்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல். திருமாவளவன், வீர வணக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் ஊடகவியலாளர்கள் நடிகர் விஜய் குறித்தும், அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்தும் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் அளித்த பதில் அரசியல் தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், " சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக மாறி ஆட்சி செய்த உதாரணங்கள் இருப்பதால்தான் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அரசியல்வாதிகளை விடவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் இருப்பவர்களின் போக்குகளை துணிந்து விமர்சிக்கக் கூடிய வகையில் அரசியல் வயப்பட்டுள்ளார்கள். அது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் கூடுதலாக உள்ளது. எனவே திரை மாயை மட்டும் ஆட்சியைப் பிடிக்க போதாது. தமிழ்நாடு மக்கள் அப்படி ஏமாற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

திரைத்துறையில் செல்வாக்கு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரள்வது என்பது இயல்பான ஒன்றுதான். ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், தமிழ்நாட்டில் விஜயகாந்த் உட்பட விஜய் வரையில் பார்க்கிறோம். ஆனால் அவர்களால் கடைசிவரை தாக்குப்பிடித்து நிற்க முடிகிறதா என்ற கேள்வி எழுகிறது. ரசிகர் பட்டாளம் என்பது வேறு, அரசியல் வயப்பட்ட களப்பணியாளர்கள் என்பது வேறு. ஆட்சியைக் கைப்பற்ற சில லட்சம் பேர் போதாது. 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் ஒரு இடத்தில் திரண்டால் உங்களுக்கு பிரமிப்பை உருவாக்கும். ஆனால் அது ஆட்சிக்குப் பயன்படாது. அதை வைத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடும் என்று சொல்லிவிட முடியாது.
மாநாட்டின் நோக்கம் என்ன?: கட்சி தொடங்கி இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளார். இரண்டுக்கும் முதலாவது மாநில மாநாடு, இரண்டாவது மாநில மாநாடு என பெயரிட்டுள்ளார்கள். கருத்தியல் சார்ந்து அந்த மாநாட்டுக்கு பெயர் சூட்ட முடியவில்லை. நாங்கள், 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு, தேசம் காப்போம் மாநாடு, மது ஒழிப்பு மாநாடு' என கருத்தியல் சார்ந்து மாநாடு நடத்தினோம். ஆனால் விஜய் நடத்திய மாநாடு அப்படி இல்லை.

வெற்றுக் கூச்சல்: சுமார் 3 மணி நேரமோ, 4 மணி நேரமோ மாநாடு நடைபெற்றது. வெறும் கூச்சல், வெற்றுச் சவடால்கள், விஜய் மாநாடு என்றுதான் அது நடந்தது. ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற வேட்கை இருக்கிறது. அதானால் திமுகவை விமர்சிக்கிறார்கள். முதல் மாநாட்டிற்கும் இரண்டாவது மாநாட்டிற்கும் முன்னேற்றம் இருக்க வேண்டும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்க கூடாது. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று இருக்க வேண்டும் அல்லது, நடப்பு அரசியல் குறித்து பேச வேண்டும். கொள்கைத் தலைவர்களான பெரியார் குறித்தோ, அம்பேத்கர் குறித்தோ அவர்களின் கருத்துக்கள் குறித்தோ எதுவும் பேசவில்லை. வெறும் திமுக வெறுப்பும் ஆட்சி அதிகாரமும் தான் பேசப்பட்டுள்ளது. கருத்தியலாக அவர்களிடத்திலே ஒரு தெளிவு இல்லை. MGR காலம் வேறு, இப்போதைய காலம் வேறு" என்று விமர்சித்து பேசியுள்ளார். அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











