வேலைக்காரன்.... வேலை முடியல... தள்ளிப் போயிடுச்சி டிசம்பருக்கு!
செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம், திடீரென்று தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் நேற்று இரவு படம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக மீண்டும் அறிவித்துள்ளனர்.

இதான் காரணம்
படம் தள்ளிப் போனதற்கு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்:
'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக வேண்டியுள்ளது. 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படமென்பதால், அனைத்து தரப்பிலும் தரமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மேலும், புதிய முறையில் தணிக்கைக்காக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு 3-4 வாரங்களாவது ஆகும்.

தள்ளிப் போனது
ஆகையால் செப்டம்பர் 29-ம் தேதி எங்களுடைய படம் வெளியாகாது. இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம்.

டிசம்பரில்
பெரிய முதலீட்டு படம் என்பதால் ஏதாவது ஒரு கொண்டாட்ட காலத்தில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். அக்டோபரில் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளது. நவம்பரில் எந்தொரு விழாக் கொண்டாட்டமும் இல்லை. ஆகையால் டிசம்பர் வெளியீடு மட்டுமே சரியாக இருக்கும் என தேர்வு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் தின விடுமுறையே சரி என்று விநியோகஸ்தர்களும் தெரிவித்ததால், டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

வருந்துகிறோம்
ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆகியோரிடமும் நீண்ட கால காத்திருப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இந்த காத்திருப்புக்கு ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.


Click it and Unblock the Notifications











