கபாலி... ‘பிளாக் டிக்கெட்’ ஊழியர்களுக்கு லீவு விட்ட வெங்கட்பிரபு!
சென்னை: ரஜினியின் கபாலி படம் ரிலீஸ் ஆவதையொட்டி வரும் வெள்ளிக்கிழமை தனது பிளாக் டிக்கெட் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை மறுதினம் ரிலீசாகிறது ரஜினியின் கபாலி படம். ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
லிங்கா படத்திற்குப் பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால், ரசிகர்கள் முதல்நாளே கபாலியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

கபாலி ரிலீஸ்...
இதனால் அன்றைய தினம் பொய்க் காரணங்களைக் கூறி பலர் விடுமுறை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சில நிறுவனங்கள் தாங்களே முன்வந்து தங்கள் ஊழியர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவித்து வருகின்றன.

விடுமுறை...
அந்தவகையில், பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபுவும் தனது தயாரிப்பு நிறுவன ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தான் காரணமாம்...
அதில், ‘வரும் வெள்ளிக்கிழமை கபாலி படம் ரிலீசாவதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும், உடல் நலம் சரியில்லை, மொத்தமாக ஊழியர்கள் விடுப்பு எடுப்பது, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும்' இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீவிர ரசிகர்...
ரஜினியின் தீவிர ரசிகர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் ராம்கோபால் வர்மா ரஜினி குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சர்ச்சை கருத்திற்குக் கூட அவர் பதிலடி கொடுத்தது நினைவிருக்கலாம்.

ரஞ்சித்...
அதுமட்டுமின்றி கபாலி பட இயக்குநர் ரஞ்சித், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். எனவே 'கபாலி' ரிலீசிற்காக அவர் தனது நிறுவனத்திற்கு விடுமுறை அறிவித்ததில் வியப்பு ஏதும் இல்லை என்கிறார்கள் அவரது ஊழியர்கள்.


Click it and Unblock the Notifications











