சோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்!
சென்னை: படம் இயக்குவதற்காக பெற்ற ரூ. 1 கோடியை இயக்குநர் வெங்கட் பிரபு நடிகை சோனாவிடம் திருப்பி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
‘குசேலன்', ‘பத்து பத்து', ‘சோக்காலி' உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சோனா. இவர் யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் படம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு, சோனா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இதையடுத்து சோனா, வெங்கட் பிரபுவுக்கு சம்பளம் பேசி, ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சொல்லியபடி வெங்கட் பிரபு சோனாவுக்கு படம் இயக்கிக் கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை சோனா திருப்பிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெங்கட் பிரபு மீது சோனா புகார் அளித்தார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், வெங்கட் பிரபு, சோனா மற்றும் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ‘சோனாவுக்கு படம் இயக்காத வெங்கட் பிரபு, அவரிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயில், மே மாதத்துக்குள் ஒரு கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். வெங்கட் பிரபுவும் பொருத்தமான முறையில் அதை ஈடு கட்டுவதாக உறுதியளித்ததாக சொல்கிறார்கள்.
எனவே சோனா, வெங்கட்பிரபு பஞ்சாயத்து கூடிய சீக்கிரமே சமரசமாக முடியும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











