படமே ஓடலைன்னு சொன்னார் அஜித்... கமல் அப்படியே பதறிட்டார்: மனம் திறந்த பிரபலம்
சென்னை: 1974ம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ்.
கே பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள் படத்தில் ஆனந்த் என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மனங்களை வென்றார்.
தொடர்ந்து மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள ராஜேஷ், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் நடிகர்கள் கமல், அஜித், விஜய் சேதுபதி ஆகியோர் பற்றி பேசியிருந்தது வைரலாகி வருகிறது.

மனம் திறந்த ராஜேஷ்
1974ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ள ராஜேஷ், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ள அவர், முன்பைப் போல இன்றைய நடிகர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். அன்றெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் நண்பர்களாகவும் ஒரே குடும்பமாகவும் பழகினர். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களெல்லாம் கேரவனுக்குள்ளே முடங்கி விடுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

அஜித் இப்போ மாறிட்டார்
தொடர்ந்து பேசியுள்ள ராஜேஷ், நடிகர் அஜித் பற்றியும் கூறியுள்ளார். அஜித்துடன் 7 படங்கள்ல நடிச்சிருக்கேன், அவர் ரொம்ப வெளிப்படையான மனிதர். திறந்த மனதோடு பேசுவார். இப்போ என்னமோ தெரியல, மற்றவர்களிடம் பேசுவதையும் பார்ப்பதையும் குறைத்துவிட்டார். வரலாறு தான் அவருடன் கடைசியாக நான் நடித்த படம். அதற்கு முன் அவருடன் தீனா, சிட்டிசன், ரெட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். வரலாறு படப்பிடிப்பில் நன்றாக பேசுவார். எவ்வளவு நடிச்சாலும் ஒரு படம் கூட ஓட மாட்டேங்குது சார்ன்னு குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு பேசுவார். இவ்வளவு இன்னசென்ட்டா குழந்தை மாதரி சொல்றாரு என நினைக்கத் தோன்றும். அதேபோல், அழகான முகம் அவருக்கு. முகத்தை பார்த்து நான் ரசித்த நடிகர்கள் இரண்டு, மூன்று பேர் தான். அதில் எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோருடன் அஜித்தும் உண்டு எனக் கூறியுள்ளார்.

பதறிப்போன கமல்
அதேபோல் நடிகர் கமல்ஹாசன் பற்றியும் பேசியுள்ள ராஜேஷ், அவருக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சினிமாவில் அனைத்து திறமைகளும் உள்ள ஒரே நடிகர் அவர் தான். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, எனது வீட்டை விற்றுவிட்டதாக சொன்னேன். உடனே சோபாவில் இருந்து பதற்றமாக எழுந்த கமல், என்ன சொல்றீங்க... நான் பணம் தரேன் உடனே வீட்டை திருப்புங்க, அதெல்லாம் விற்கக் கூடாது என உரிமையோடு எனது கைகளைப் பிடித்தார். அப்படிப்பட்ட மனிதருடன் நண்பராக இருப்பதே எனக்கு பெருமை எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி அப்படித்தான்
அதேபோல், விஜய் சேதுபதி பற்றியும் மனம் திறந்துள்ள ராஜேஷ், அவர் ஒரு இயற்கையான நடிகர். பாத்திரங்களுக்குள் அவர் எளிதில் போய்விடுவார். நான் இதுவரை 154 படங்களில் நடித்திருக்கிறேன், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர்களுடன் பழகியிருக்கிறேன். என்னதான் அதை மறக்க நினைத்தாலும், அது ஒரு ஓரத்தில் நிற்கும். அந்த மாதிரி எதுவுமே விஜய் சேதுபதியிடம் இருக்காது. அது பெரிய விஷயம். பெரும்பாலான நடிகர்கள் காற்றில் மிதப்பது மாதிரி மனநிலை வைத்திருப்பார்கள். வித்தியாசமான உலகில் இருந்து வந்தது மாதிரி நடந்து கொள்வார்கள். அந்த மாதிரி விஜய் சேதுபதி இல்லை சாதாரணமாகத் தான் வருவார் என பெருமையாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











