எங்கேயும்... எப்போதும்.. சங்கீதம்... சந்தோஷம்... கோடி நன்றி சொல்வோம் எம்.எஸ்.விக்கு!
சென்னை: தமிழ் சினிமாவோடு இரண்டறக் கலந்து விட்ட இசையமைப்பாளர் எனலாம் எம்.எஸ்.விஸ்வநாதனை.
87 வயதான பழம் பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உடலளவில் அவர் மறைந்தாலும், காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அவர் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

எங்கேயும் எப்போதும்...
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் கலந்திருக்கும். நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும், எப்போதும் பாடல் நிச்சயம் கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும்.

மெல்லிசை மன்னன்...
மனதை மயக்கும் இனிமையான பாடல்களைத் தந்ததாலேயே அவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டம் கிடைத்தது. கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி.

தலைமுறைத் தாண்டியவர்...
சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், அஜீத் என மூன்று தலைமுறைகளைத் தாண்டி பணிபுரிந்தவர் எம்.எஸ்.வி. ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் என பாராபட்சமின்றி தனது இசையை அள்ளி வழங்கிய வள்ளல் அவர்.

பாடகராக...
இசையமைப்பதோடு நிறுத்தி விடாமல், சில பாடல்களை தந்து வித்தியாசமான குரலால் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.வி. 'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான், தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்' என பாடல் வரிகளை உண்மையாக்கியவர்.

மற்ற இசையமைப்பாளர்களின் இசையில்...
காலத்தால் அழியாத பலப் படங்களைக் கொடுத்த எம்.எஸ்.வி. தனது இசையில் மட்டுமின்றி, இளையராஜா, தேவா, கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரது இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

குணச்சித்திர நடிகராக...
இசையமைப்பாளராக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்தவர் எம்.எஸ்.வி. தமிழில் சுமார் 10 படங்களில் அவர் நடித்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்ளிட்ட் படங்கள் அவற்றில் சில.

விருதுகள்...
தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர் எம்.எஸ்.வி.
உங்களை என்றும் எங்கள் நெஞ்சம் மறக்கப் போவதில்லை எம்.எஸ்.வி...


Click it and Unblock the Notifications











