பொன்னியின் செல்வன் வந்ததும் ராஜ ராஜ சோழன் பற்றிய வெற்றிமாறன் பேச்சு.. ஆதரவும்.. எதிர்ப்பும்!
சென்னை: ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்படம் மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடைபெற்றது.
அதில், கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

திருமாவளவன் மணிவிழாவில் வெற்றிமாறன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை மணிவிழாவாக நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன் அரசியல் ரீதியான பல கருத்துக்களையும், திராவிடம் தமிழ் சினிமாவை எப்படி மாற்றி உள்ளது என்பது குறித்தும் விரிவாக பேசினார்.

ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக
அந்த விழாவில் பேசிய வெற்றிமாறன் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது மற்றும் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிப்பது போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகிறது என பேசியிருந்தார். அவரது அந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தஞ்சையில் சிவன் கோயில்
தஞ்சை பெரிய கோயிலை சிவனுக்காக கட்டிய ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் முன் வைத்து இயக்குநர் வெற்றிமாறனை விளாசி வருகின்றனர். அதற்கு பதிலாக சிவன் இந்து கடவுள் இல்லை என்றும் சைவ கடவுள் என்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ள இந்த சமயத்தில் ராஜ ராஜ சோழனை இந்து கடவுளாக சித்தரிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டை இயக்குநர் மணிரத்னம் மீது முன் வைக்கிறாரா வெற்றிமாறன் என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

அரியும் சிவனும் ஒண்ணு
பொன்னியின் செல்வன் கதையிலேயே வந்தியத்தேவன் சைவம் பெரிதா? வைணவம் பெரிதா? என ஆழ்வார்க்கடியன் நம்பி சைவர்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் போது, அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில மண்ணு என வந்தியத்தேவன் பேசும் வசனம் இருக்கும் என வெற்றிமாறனை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

படம் பார்க்கல
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டீங்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இன்னும் படம் பார்க்கல என கூறியுள்ளார். சினிமாவை திராவிடம் கைப்பற்றியதால் தான் மதவாத சக்திகளுக்குள் தமிழ்நாடு அகப்படவில்லை என அவர் பேசியதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எச். ராஜா கண்டனம்
"சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்" என எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிமாறனை விளாசித் தள்ளி உள்ளார். அதே நேரத்தில், தமிழர்களின் அரசன் தான் ராஜ ராஜ சோழன் என்பதை அடையாளப்படுத்தவே வெற்றிமாறன் அப்படி பேசினார் என அவருக்கு ஆதரவான கருத்துக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











