அப்போ சில்க் ஸ்மிதா... இப்போ கணிதமேதை சகுந்தலா தேவி - கெத்து காட்டும் வித்யா பாலன்
சென்னை: கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் நடிகை வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சகுந்தலா தேவியாக நடிப்பதால் உற்சாகமடைந்துள்ளார் வித்யாபாலன். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்யாபாலன், தனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறு கிராமத்து பெண்மணி பாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வரலாற்று நாயகர்களின் பயோ பிக் எடுப்பது ஒரு விதமான ட்ரெண்டிங். காந்தி, ஹிட்லர், போன்றவர்களின் பயோ பிக் ஒரு காலத்தில் வந்து கொண்டு இருந்தன. ஆனால் படத்தை பார்க்கும் பொழுது சுவாரஸ்யம் குறைவாக இருக்கும். காட்சிகள் நகரும் விதம் ஏனோ மனதில் உட்காரவில்லை என்றே சொல்லலாம். அதே சமயத்தில் அந்தக் கதையோடு ஒன்றி நாமும் கூடவே பயணித்தால் சுவராஸ்யம் கூடும்.

இப்போதெல்லாம் பயோபிக் படங்களை கமர்சியல் எலிமெண்ட்ஸ் கலந்து எடுக்கிறார்கள். சமீபத்தில் ஹிட்டான பேட்மேன்(Padman) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்த வரிசையில் தற்போது கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவிருக்கிறார்கள். இதில் நடிக்கப்போவது பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான்.
நம் அனைவருக்கும் தெரிந்த கனித மேதை ராமானுஜர். அதற்கு பிறகு நிறைய கணித மேதைகள் வந்தார்கள். இப்பொழுது இந்த டிஜிட்டல் உலகத்தில் பிரபலமானவர், பெங்களூருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி.
சிறு வயதில் குடும்பச் சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாகக் கணக்குகளைத் தீர்க்க பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வு காண்பதில் வல்லவர். பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால், மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் திறன் கொண்ட அவர், அபார கணிதத் திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர்.
2013ஆம் ஆண்டு தனது 83ஆவது வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் செய்த சாதனைகளை நாம் என்றுமே மறக்கவோ தவிர்க்கவோ முடியாது. தற்போது இந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கைக் கதைகள் அதிகம் படமாக்கப்படும் நிலையில், உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது.
சகுந்தலா தேவியாக, நடிகை வித்யா பாலன் நடிக்க, கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். வித்யா பாலன் ஏற்கனவே டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியவர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கக்கூடிய ஒரு நடிகை வித்யாபாலன். ரோனி ஸ்குருவாலா தயாரிப்பில் வரும் ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று லண்டனில் துவங்கியுள்ளது.
சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும் பொழுதே ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நிற்கிறார் வித்யாபாலன்.
தனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சின்னஞ்சிறு கிராமத்து பெண்மணி கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இந்த கணித மேதையின் பாத்திரத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் வித்யாபாலன். படமும் கண்டிப்பாக நிறைய நல்ல பதிவுகளை மக்களுக்கு சொல்லும் என்று நம்புவோம். வெற்றிகளை எட்டிப்பிடிக்கும் வித்யாவுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











