தெறியைத் தொடர்ந்து பூஜையுடன் தொடங்கியது விஜய் 60
சென்னை: தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் விஜய் 60 படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை.
விஜய் தற்போது அவரது 59 படமான தெறி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். அப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

இந்நிலையில் அவரது 60 வது படத்திற்கான பூஜையானது நேற்று விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இப்பூஜையில் சந்தோஷ் நாராயணன், பரதன் மற்றும் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தெறி படத்தின் படப்பிடிப்பிற்காக லடாக் சென்று திரும்பியதால் நடிகர் விஜய் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வார் என்று கூறுகின்றனர்.
மேலும் படப்பிடிப்பிற்கு முன்னர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒரு பூஜையை மீண்டும் நடத்தி, அதில் விஜய்யை கலந்து கொள்ள வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய் 60 படத்தில் இயக்குநர் பரதனுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன்(இசை), மதி(ஒளிப்பதிவு) மற்றும் பிரவீன்(எடிட்டிங்) ஆகியோர் பணிபுரியவிருக்கின்றனர்.
முழுக்க கமர்ஷியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மம்முட்டியும், ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











