விபத்துக்குப் பிறகு சுயநினைவை இழந்தாரா விஜய் ஆண்டனி...? சிகிச்சைக்கு நாள் குறித்த மருத்துவர்கள்?
சென்னை: இசையமைப்பாளராக இருந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
தற்போது மழை பிடிக்காத மனிதன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தற்போது சில தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2
கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் தயாரிப்பாளர், ஹீரோவாக கலக்கியவர், அடுத்தடுத்து நான், சலீம், பிச்சைக்காரன் என சூப்பர் ஹிட படங்களில் நடித்து கெத்து காட்டினார். தற்போது கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் விபத்து
பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி ஹீரோவாக நடிப்பதோடு, அவரே தயாரித்து, இசை அமைக்கவும் செய்கிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக காவ்யா தாப்பர் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி கடந்த சில தினங்களாக லங்காவி தீவில் நடந்து வந்தது. கடலுக்குள் செல்லும் ஜெட் ஸ்கை எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு ஜெட் ஸ்கை, விஜய் ஆண்டனியின் பைக் மீது மோதி விபத்து நடந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம், உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது நாயகி காவ்யா தாப்பர் காயங்களின்றி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து விஜய் ஆண்டனியை மீட்ட படக்குழுவினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையறிந்த விஜய் ஆண்டனியின் மனைவி உள்ளிட்டோர் கோலாலம்பூர் சென்றுள்ளனர்.

சுயநினைவுடன் இருக்கிறாரா?
காயம் அதிகளவில் இருந்தபோதும் விஜய் ஆண்டனியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும், அவர் அபாய கட்டத்தை விட்டு தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜய் ஆண்டனி சுயநினைவு இழந்த நிலையில் நாளை அவருக்கு முக்கியமான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருடைய முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இதுகுறித்து உண்மையான நிலவரம் விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











