ஓடிடியில் வரவேற்பு பெற்ற விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்.. திருட்டு கதையா?.. புது பஞ்சாயத்து
சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இப்போது நடிகராக பிஸியாகியிருக்கிறார். அந்தவகையில் அவர் ஹீரோவாக நடித்த 25ஆவது படமான சக்தித் திருமகன் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியானது. சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்தப் படத்தின் கதை திருட்டு கதை என்ற சர்ச்சை வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என பல படங்களில் நடித்தார். ஒருசில படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இந்தச் சூழலில் அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் சக்தித் திருமகன் படத்திலும் நடித்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸானது.
25ஆவது படம்: இப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹீரோவாக 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் சுமாரான வரவேற்பை பெற்ற அப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸானது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகும் அப்படத்துக்கு தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் அதிகம் கிடைத்திருக்கிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரேகூட படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருட்டு கதையா?: இந்நிலையில் இந்தக் கதை திருடப்பட்டது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. சுபாஷ் சுந்தர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், "எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் "தலைவன்". அதன் SNAP shotsai குடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள்.
மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன்.ஹீரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான், அவனிடம் கூடவே ஹிரோ இருப்பான், ஹிரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹிரோ அவனுக்கு எதிராக திரும்புவான். ஹீரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான்.
இதிலும் அப்படித்தான்: ஹீரோவை தீவிரவாதியாக சித்தரிக்கிறான். ஹீரோ வில்லனுடைய நிறுவங்களை நஸ்டத்துக்கு உள்ளாகுவது. ஹீரோவின் அம்மாவை விபச்சாரியாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில்.. இதிலும் அப்படி விபச்சாரியாக சித்தரித்திருப்பார்கள்.. என் கதையில் இறுதியில் வரும் வசனம் "உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும், மக்கள் கடுமையான கஸ்டம் அனுவவிப்பார்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களை சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்" என்பான் மாதவன்.
யாருக்கு வெளிச்சம்: ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான்.. இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான்.. வெளியில் ராணுவம் நிற்க.. என் கதையை Dream warriorskku அனுப்பிய சான்று இருக்கிறது, சக்தி திருமகனின் இயக்குனர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார்.. கதை இலாகா என்கிற பெயரில் , புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?
கேஸ் போடப்போகிறேன்: சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி? கதையை copy rights of indiavil register செய்து வைத்துள்ளேன், டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன்.
அப்படி இருந்தால் நன்று: அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











