லைகர் படத்தால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த சிக்கல்… மோசடி புகாரில் அமலாக்கத்துறை முன் ஆஜர்
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படமாக வெளியான லைகர் மோசமான விமர்சனங்களால் படுதோல்வியடைந்தது.
லைகர் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர் பணமோசடி புகாரில் சிக்கியுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொக்கை வாங்கிய லைகர்
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் லைம் லைட்டில் வந்த விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்திருந்த 'லைகர்' ஆக.25ம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது. பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடிக்க, வில்லன் கேரக்டரில் பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்திருந்தார். இவ்வளவு இருந்தும் லைகர் படம் நெகட்டிவான விமர்சனங்களால் ரசிகர்களிடம் செம்ம மொக்கை வாங்கியது.

வந்தது புது பஞ்சாயத்து
ஏற்கனவே லைகர் படம் வெளியாகும் முன்னர் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் விஜய் தேவரகொண்டா. அவருக்கு எதிராக நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததுடன், லைகர் படத்தையும் பாய்காட் செய்து திரையரங்குகளில் இருந்து விரட்டி அடித்தனர். இந்நிலையில், தற்போது லைகர் படத்தின் தயாரிப்புக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற புதிய சிக்கலில் படக்குழு சிக்கியுள்ளது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

விசாரணைக்கு ஆஜரான விஜய் தேவரகொண்டா
லைகர் படத்தின் தயாரிப்புக்காக தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் முதலீடு செய்துள்ளதாக பக்கா ஜட்சன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், FEMA எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி கவுரிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளார்.

திரையுலகில் பரபரப்பு
மைக் டைசன் உட்பட தொழில்நுட்பக் குழுவினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்தும் படத்திற்கான 125 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கான தரவுகள் பற்றியும் விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மெகா ஷூட்டிங் லாஸ் வேகாஸில் நடைபெற்றது குறித்தும் அதிகாரிகள் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பூரி ஜெகநாத்தும் சார்மி கவுரும் கடந்த வியாழக்கிழமை ஆஜராகி, 12 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில், தற்போது இவர்களுடன் லைகர் பட ஹீரோ விஜய் தேவரகொண்டாவும் ED அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளது, தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











