ரூ. 15 கோடி செலவு செய்த பிறகு கைவிடப்பட்ட விஜய் படம்
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் ஹீரோ படம் கைவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படம் புகழ் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ என்ற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு துவங்கி டெல்லியில் சில முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள்.

20 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அது திருப்திகரமாக இல்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் ஹீரோ படத்தை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நடத்த இதுவரை ரூ. 15 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் ஹீரோ படம் கைவிடப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட ஹீரோ படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே, பேட்ட படம் புகழ் மாளவிகா மோகனன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த ஹீரோ படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஹைதராபாத்தில் பிரமாண்ட பூஜை போட்டு படத்தை துவங்கி இப்படி பாதியில் நிறுத்திவிட்டனர்.
ஹீரோ படம் கைவிடப்பட்டதை பார்த்தால் தமிழ் ரசிகர்களுக்கு வர்மா கைவிடப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவ் விக்ரமை வைத்து இயக்குநர் பாலா வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு படம் திருப்தியாக இல்லை என்று கூறி அதை கைவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டியின் உதவியாளரான கிரிசாயாவை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் படத்தின் ரீமேக்கிற்கு ஏற்பட்ட நிலை அவர் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள டியர் காம்ரேட் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை விஜய் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். டியர் காம்ரேட் படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரித்துள்ளது. டியர் காம்ரேட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











